இங்கிலாந்தில் கனமழை: 7 பேர் பலி - நாடு முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை
லண்டன்: இங்கிலாந்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக நாடு முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக மேற்கத்திய நாடுகள் இயற்கை பேரிடர்களால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்காவில் நிலவும் கடும்பனி காரணமாக அந்நாடே முடங்கிப் போயுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர். மேலும், அங்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.
அவதி...
கடந்த சில நாட்களாக புயலின் தாக்கத்தாலும் விடாமல் பெய்து வரும் மழையாலும் இங்கிலாந்து பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றது.
தொடரும் அபாயம்....
இங்கிலாந்தின் டோர்சேட் என்ற பகுதியில் மட்டும் குறைந்தபட்சமாக 120 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதில் மிகுந்த அளவில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதியாய் கருதப்படுவது சிஸ்வேல், இங்கு பாதுகாப்பை பலப்படுத்தும் விதத்தில் அபாய மணிகள் அலர விடப்பட்டன. இதனைதொடர்ந்து ஸ்காட்லாந்திலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தடை...
கடந்த 6ம் தேதி, வடக்கு அயர்லாந்தின் கடலோர பகுதிகளில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அச்சப்படும் அளவிற்கு அப்பகுதியில் பேரலைகள் ஒன்றும் வரவில்லை.
வெள்ள எச்சரிக்கை...
இதனால் பல்வேறு வெள்ள அபாய எச்சரிக்கைகளை அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. எனவே மக்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 பேர் பலி....
இதுவரை 7 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். 1700க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.