"ஹிட்லருக்கு" பின் இதை செய்தது அதிபர் புதின் தான்.. உக்ரைன் நகரங்களில் குண்டு மழை.. பெரும் பரபரப்பு
கீவ்: உக்ரைன் நாட்டில் 5 நாட்களைக் கடந்தும் போர் தொடரும் நிலையில், ரஷ்ய ராணுவம் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ளது.
கடந்த வியாழக்கிழமை உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா முழு வீச்சில் போர் தொடங்கியது. அங்குக் கடந்த சில வாரங்களாகவே ராணுவம் குவிக்கப்பட்டு வந்தாலும் கூட முழு வீச்சில் போர் தொடங்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
முதல்வராக முதல் பிறந்தநாள்... 2 ஆண்டுகளுக்குப் பிறகு தொண்டர்களிடம் வாழ்த்து பெறும் மு.க ஸ்டாலின்
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை உலக நாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் என பல்வேறு ஏற்கனவே பல நாடுகள் ரஷ்யாவுக்குப் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன.
அமைதி பேச்சுவார்த்தை
இதற்கிடையே நேற்றைய தினம் இரு தரப்புக்கும் இடையே பெலராஸ் நாட்டினன் எல்லையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனால் நேற்றைய தினம் உக்ரைன் நாட்டில் போர் மேகங்கள் சற்றே ஓய்ந்து இருந்தன. இந்தப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் ஒப்புக் கொள்ளும் வகையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
குண்டு மழை
இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையால் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. குறிப்பாக நேற்றைய தினமே கூட உக்ரைன் நாட்டின் இரு பெரு நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியானது. உக்ரைனின் இரு பெரிய நகரங்களான கீவ் மற்றும் கார்கிவ் நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
முக்கிய நகரங்கள்
நேற்றைய தினம் கார்கிவ் நகரில் உள்ள அரசு தலைமையகம் கட்டிடத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கடும் தேசம் ஏற்பட்டதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த ராக்கெட் தாக்குதலில் சுமார் 17 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலும் கூட தொடர்ச்சியாகக் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டுவருகிறது. இது தொடர்பாக வெளியான சாட்டிலைட் படங்களிலும் கூட சுமார் 40 மைல் நீளம் கொண்ட ரஷ்ய ராணுவ கான்வாய் நகரத்திற்குச் செல்வதும், அருகிலுள்ள பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எரிந்து கொண்டு இருப்பதும் தெளிவாகப் பதிவாகி உள்ளது.
நாஜி படை
இதனால் இங்குள்ள பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கீவ் மற்றும் கார்கிவ் நகரங்கள் உக்ரைன் நாட்டின் இரு முக்கிய நகரங்களாகக் கருதப்படுகிறது. கடைசியாக இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனி ராணுவம் கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களைத் தாக்கின. கடந்த 1941 நாஜி படைகள் இந்த இரு நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தன. அதன் பின்னர் சுமார் 80 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த இரு நகரங்களும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது இதுவே முதல்முறையாகும்.
இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் கடந்த 1941 செப் மாதம் கீவ் நகருக்குள் நுழைந்த ஜெர்மானிய நாஜி படைகள் வெறும் இரண்டு நாட்களில் 30,000க்கும் மேற்பட்ட யூதர்களைக் கொன்று குவித்தது. அதன் பின்னர் வெறும் சில மாதங்களில் அங்கிருந்த பல ஆயிரம் பேரை நாஜி படைகள் கொன்றுள்ளனர். அதே ஆண்டு அக். மாதம் கார்கிவ் நகருக்கு வெளியே ஜெர்மனி மற்றும் சோவியத் படைகள் போரிட்டன. அப்போது வெறும் 4 நாட்களில் கார்கிவ் நகரை நாஜிப் படைகள் கைப்பற்றியது.
உக்ரைன் அதிபர்
உக்ரைன் நாட்டின் பல தலைவர்களும் ரஷ்யாவின் இந்தத் தாக்குதலை இரண்டாம் உலகப் போரின் நடத்தப்பட்ட தாக்குதலுடன் ஒப்பிட்டு விமர்சிக்கின்றனர். சமீபத்தில் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, "1941இல் நடைபெற்றதைப் போலவே கீவ் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்ய ராணுவம் குண்டுவீசித் தொடங்கி உள்ளன. இந்த போருக்கு எதிராக மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் போராடும் ரஷ்ய மக்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். போரை நிறுத்த அனைவரும் ஒன்றாக இணைந்து போராடலாம்" என்று அவர் தெரிவித்தார்