ஜட்டிக்குள் குண்டு வைத்தார்.. ஆனால் 2 வாரமாக அதையே போட்டதால் குண்டு செயலிழந்த "பரிதாபம்"...!
நைரோபி: நைஜீரியாவைச் சேர்ந்த அல் கொய்தா தீவிரவாதியான உமர் பரூக் அப்துல்லாமுத்தல்லாப் என்ற வாலிபர் கடந்த 2009ம் ஆண்டு விமானம் ஒன்றைத் தகர்க்கும் நோக்கில், தனது ஜட்டிக்குள் வெடிகுண்டை பதுக்கி வைத்து எடுத்துச் சென்றார்.
ஆனால் கடைசி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கவில்லை. மாறாக லேசான தீப்பொறியே கிளம்பியது. இதில் அவரது மர்ம உறுப்பு எரிந்து சேதமாகிப் போனது. அதேசமயம், குண்டு வெடிக்காததால், விமானமும், அதில் பயணம் செய்த பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஒரே ஜட்டியை 2 வாரமாக போட்டிருந்த காரணத்தால்தான் குண்டு சேதமாகிப் போனதாக தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்கொலைப் படைத் தாக்குதல் முயற்சி
அல் கொய்தா சார்பில் தற்கொலைப் படை வீரராக அனுப்பப்பட்டவர் இந்த பரூக். ஆம்ஸ்டர்டாம் - டெட்ராய்ட் இடையிலான விமானத்தில் குண்டு வைப்பதற்காக கடந்த 2009ம் ஆண்டு அல் கொய்தா இவரை தேர்ந்தெடுத்து, பயிற்சி கொடுத்து அனுப்பியது.
வெடிக்கவில்லை
இதற்காக இவரது ஜட்டியில் வெடிகுண்டை பொருத்தி அதை அணிய வைத்து அனுப்பினர். ஆனால் அதில் ஒரு தவறு நடந்து விட்டது. தொழில்நுட்பத் தவறெல்லாம் இல்லை. மாறாக பரூக் செய்த தவறுதான் அது.
ஒரே ஜட்டியுடன் 2 வாரமாக சுற்றியதால்
பரூக் என்ன செய்தார், குண்டு பொருத்தப்பட்ட ஜட்டியை அதற்கு முன்பு 2 வாரமாக பயன்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக வெடிகுண்டு செயலிழந்து போயுள்ளது.
தீப்பொறி.. பொசுங்கியது!
ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பியதும், வெடிகுண்டை இயக்க முயற்சித்துள்ளார் பரூக். ஆனால் குண்டு வெடிக்கவில்லை. ஜட்டியின் தாக்கம் காரணமாக குண்டு செயலிழந்து போனது. அதேசமயம், அதிலிருந்து கிளம்பிய தீப்பொறியால் அவரது மர்ம உறுப்பு பொசுங்கிப் போய் விட்டது.
2 வாரமாக குண்டோடு திரிந்துள்ளார்
இதுகுறித்து அமெரிக்க விசாரணை அதிகாரி ஜான் பிஸ்டோல் கூறுகையில், கிட்டத்தட்ட 2 வாரமாக வெடிகுண்டு பொருத்தப்பட்ட ஜட்டியுடன் திரிந்துள்ளார் பரூக். இதனால் குண்டு செயலிழந்து போயுள்ளது. அதன் தன்மை மக்கிப் போய் விட்டது என்றார் அவர்.
ஆயுள் தண்டனை
பரூக்குக்கு கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்க கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டு வெடித்திருந்தால்
சம்பந்தப்பட்ட விமானம் டெட்ராய்ட் நகரில் இறங்க சில நிமிடங்கள் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. ஒருவேளை அந்த குண்டு மட்டும் வெடித்திருந்தால் கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். மேலும், அமெரிக்க மண்ணில் நடந்த மிகப் பெரிய விமான தகர்ப்பாகவும் அது மாறியிருக்கும்.
ஆனால் பரூக்கின் ஜட்டி அத்தனை அலங்கோலத்தையும் தடுத்து விட்டது!