அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் உடனடியாக வெளியேற வேண்டும்: ரஷ்ய அதிபர் புடின் அதிரடி உத்தரவு!
ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
மாஸ்கோ: ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாக ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ரஷ்யா மீது பொருளாதார தடை
இதன் காரணமாக வடகொரியா, ஈரான், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதிபர் டிரம்பின் கையெழுத்திற்காக அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் ரஷ்யா கோபமடைந்துள்ளது.
பதிலடி கொடுக்கும் ரஷ்யா
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய அதிபர் புடின் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளில் 755 பேர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
எந்த வாய்ப்பும் இல்லை
ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சியான ரஷ்யா 24 தொலைக்காட்சியில் நேர்க்காணல் அளித்த புடின் இவ்வாறு கூறினார். மேலும் அமெரிக்காவுடன் உடனடியாக உறவு மேம்பட எந்த வாய்ப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
755 பேர் வெளியேற வேண்டும்
ரஷ்யாவில் சுமார் 1000-க்கும் அதிகமான அமெரிக்க தூதரக அதிகாரிகள் தற்போது பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 755 பேரை செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குள் வெளியேற புடின் உத்தரவிட்டுள்ளார்.
அதிகரிக்கும் மோதல்
அமெரிக்கா - ரஷ்யா இடையே ஏற்கனவே பல்வேறு விவகாரங்களில் பனிப்போர் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், தற்போது தூதரக அதிகாரிகளை ரஷ்யா வெளியேற உத்தரவிட்டிருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசலை அதிகப்படுத்தி மோதலை உருவாக்கியுள்ளது.