கடத்தல் மன்னன் சுபாஷ் கடத்திய ரூ.6.35 கோடி மாணிக்கவாசகர் சிலையை மீட்ட யு.எஸ். அதிகாரிகள்
நியூயார்க்: சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் கடத்திய தமிழகத்தில் உள்ள ஸ்ரீபுரந்தான் கோவில் சிலை ஒன்று அமெரிக்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ. 6 கோடியே 35 லட்சம் ஆகும்.
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தொழில் அதிபரான சுபாஷ் கபூர் மான்ஹாட்டன் நகரில் பழங்கால கலைப்பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். அவர் இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளில் இருந்து சிலைகள், ஓவியங்களை கடத்தி விற்பனை செய்து போலீசில் சிக்கினார். இதையடுத்து அவர் கடத்திய சிலை உள்ளிட்ட பொருட்களை அந்தந்த நாடுகளிடம் திருப்பிக் கொடுக்கும் முயற்சியில் அமெரிக்க போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சுபாஷ் கபூரிடம் இருந்து தான் வாங்கிய 2.5 அடி உயர வெண்கலத்தால் ஆன மாணிக்கவாசகர் சிலையை குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் திருப்பிக் கொடுத்துள்ளார் ஒருவர். அந்த சிலையின் மதிப்பு ரூ.6 கோடியே 35 லட்சம் ஆகும். அது 11-12வது நாற்றாண்டைச் சேர்ந்த சிலை ஆகும். அந்த சிலை தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் இருக்கும் சிவன் கோவிலில் இருந்து திருடப்பட்டது.
அது திருடப்பட்ட சிலை என்று தெரியாமல் அந்த நபர் அதை கடந்த 2006ம் ஆண்டு வாங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் சோழர் காலத்து 6 வெண்கல சிலைகளையும் மீட்டுள்ளனர். அந்த சிலைகள் முறைப்படி இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது.
2007ம் ஆண்டில் இருந்து இதுவரை 7 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட கடத்தல் பழங்கால பொருட்களை மீட்ட அமெரிக்க அதிகாரிகள் அவற்றை 30 நாடுகளிடம் திருப்பிக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.