சீக்கியர்கள் கொலை: சோனியாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்க கோர்ட்
நியூயார்க்: 1984ம் ஆண்டில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக சோனியாகாந்தி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியை சீக்கிய பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து நடத்தப்பட்ட கலவரத்தில் வட இந்தியாவில் ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இக்கலவரத்தை தூண்டிவிட்டதாகவும், குற்றவாளிகளை காப்பாற்றியதாகவும் கூறி காங்கிரஸ் கட்சி மீதும், அதன் தலைவர் சோனியாகந்தி மீதும் அமெரிக்காவில் உள்ள 'நீதி தேடும் சீக்கியர்களுக்கான அமைப்பு', அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, 'சோனியாகாந்தி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை' என்று கூறி நீதிபதி பிரையன் கோகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இது தொடர்பாக 13 பக்க தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதி மேலும் கூறுகையில், சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் சோனியாகாந்தி காங்கிரஸ் தலைவரானார். எனவே இந்த கலவரத்துக்கு அவர் தனிப்பட்ட முறையில் பொறுப்பாவார் என்ற கருத்தை ஏற்க முடியாது. அதே நேரம், இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு வழக்குகள் தொடர தடை விதிக்க வேண்டும் என்ற சோனியாவின் கோரிக்கையை நிராகரிக்கிறேன் என்றார்.
சோனியா காந்தி தரப்பு வக்கீல் ரவி பத்ரா கூறுகையில், போலி விளம்பரம் தேடும் நோக்கில் சீக்கிய அமைப்பு தொடர்ந்த ழழக்கில் நீதி வென்றுள்ளது என்றார். முன்னதாக, இவ்வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சோனியாகாந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மனு தாக்கல் செய்த சோனியா அமெரிக்கா செல்ல மறுத்துவிட்டார். இதே கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கை கடந்த ஏப்ரல் மாதம், நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications