ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் முடிவு!!
வாஷிங்டன்: கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்து வரும் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
உக்ரைனின் கிழக்கு பகுதி ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. இந்த பகுதியில்தான் 298 பயணிகளுடன் பறந்த மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
தற்போது இப்பகுதியை மீட்க உக்ரைன் தீவிரமாக போராடி வருகிறது. உக்ரைனை ஆட்டிப் படைத்து வரும் இந்த கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்ததால் ரஷ்யா மீது ஏற்கெனவே அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பொருளாதார தடைகள் விதித்தன.
இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஒபாமா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது ஈராக் மற்றும் காஸா நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையின் முடிவில் ரஷ்யா மீது புதிய பொருளாதர தடைகளை விதிப்பது என்று அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் தீர்மானித்தனர்.