உக்ரைனை தொடர்ந்து தைவானை உசுப்பேத்தும் அமெரிக்கா; சீனா தொடங்கிய ஏவுகணை தாக்குதல் பயிற்சி
பெங்ஜிங்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க காரணமாக அமைந்த அமெரிக்காவின் நடவடிக்கைகள் தற்போது தைவான் மீது சீனா ஆக்கிரமிப்பை மேற்கொள்ளவும் காரணமாக அமையும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் தைவான் நோக்கி சீன ராணுவம் ஏவுகணையை வீசி பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவின் நான்சி பெலோசி வருகையை தொடர்ந்து தைவான் நாட்டை சுற்றிய கடற்பரப்பில் சீனா பிரம்மாண்ட போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதால் பெரும் பதற்றம் தொடருகிறது
தைவான் தனி ஒரு நாடாக இயங்கினாலும் சீனாவைப் பொறுத்தவரையில் ஒருங்கிணைந்த நாட்டின் மாகாணமாகவே கருதுகிறது. ஒற்றை சீனா என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளும் உலக நாடுகள், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியே தைவான் என்பதை ஏற்க வேண்டும் என்கிறது.
அமெரிக்கா பற்ற வைத்த நெருப்பு... தைவான் கடற்பரப்பை சுற்றி வளைத்து சீனா பிரம்மாண்ட போர் ஒத்திகை!
நான்சி வருகை
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், தைவான் - சீனா விவகாரத்தில் குழப்பமான நிலைப்பாடுகளைத்தான் கடைப்பிடித்து வருகின்றன. ஒற்றைச் சீனா கோட்பாட்டையும் ஏற்றுக் கொண்டு, தைவான் ஒரு தனிநாடு என்பதையும் ஏற்றுக் கொண்டு நாடுகள் கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. அமெரிக்காவின் பிரதிநிதி நான்சி பெலோசியின் வருகையும் இந்த குழப்பத்தின் வெளிப்பாடாக இருந்தது. நான்சி பெலோசியின் தைவான் வருகை, சீனாவுடனான போர் பதற்றத்தை கூடுதலாக்கி இருக்கிறது.
உக்கிரம்
தைவானை இணைத்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாய நெருக்கடியை சீனாவுக்கு உருவாக்கிவிட்டிருக்கிறது அமெரிக்கா. அதாவது தைவானை சீனா ஆக்கிரமிக்கத் தூண்டி விட்டிருக்கிறது அமெரிக்கா என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அமெரிக்காவின் நான்சி பெலோசி வருகையின் போதே தைவான் வான் பரப்பில் 27 போர் விமானங்களை சரமாரியாக பறக்கவிட்டது சீனா. நெருப்போடு விளையாடுகிறது அமெரிக்கா என பகிரங்கமாக எச்சரித்தது. இப்போது நான்சி பெலோசி, தைவான் பயணத்தை முடித்துவிட்டு கிளம்பிவிட்டார். ஆனால் சீனாவின் உக்கிரம் ஓயவில்லை.
ஏவுகணை பயிற்சி
இந்நிலையில் தற்போது சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தைவான் நோக்கி ஏவுகணைகளை வீசி பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. தைவான் தீவின் கிழக்கு கடற்கரையில் இலக்குகளை துல்லியமாக ஏவுகணை மூலம் தாக்கி அழித்து பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த தகவலை சீனா இராணுவத்தின் (பிஎல்ஏ) கிழக்கு தியேட்டர் பிரிவு செய்தித் தொடர்பாளர் கர்னல் ஷி யி உறுதிப்படுத்தியுள்ளார்.
Recommended Video
தைவான்
தைவான் தீவைச் சுற்றி நடைபெறும் கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கும் தைவானுக்கும் இடையிலான கூட்டுக்கு எதிரான தடுப்பு அரண் அமைக்கும் நடவடிக்கையாகும் என சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டான் கெஃபே தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' அமைப்பில் உக்ரைன் நாட்டை சேர அமெரிக்கா வலியுறுத்தி அந்நாடும் அதில் சேர்வதாக உறுதியளித்த காரணத்தால் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. இந்நிலையில் தைவான் தனி நாடு கோரிக்கையை ஆதரிக்கும் நோக்கில் அமெரிக்கா செயல்படுவதால் சீனா தைவான் மீது ராணுவ நடவடிக்கைகளை தொடர உள்ளது. ஆக இவை எல்லாவற்றிற்கும் அமெரிக்காதான் முக்கிய காரணமாக இருக்கிறது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.