நாங்கள் மியான்மர் அல்ல, கனவு காண வேண்டாம்.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: மியான்மரில் நடந்ததைப் போல பாகிஸ்தானிலும் நடத்தலாம் என இந்தியா பகல் கனவு காணக் கூடாது. இது பாகிஸ்தான், மியான்மர் அல்ல என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் செளத்ரி நிஸார் அலி கான் கொக்கரித்துள்ளார்.
இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி விட்டு மியான்மர் எல்லைக்குள் புகுந்து பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை, அதிரடியாக எல்லை தாண்டி சென்று சரமாரியாக தாக்கி 100க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த இந்திய ராணுவத்தின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் செய்ததைப் போல பாகிஸ்தானுக்குள்ளும் புகுந்து தீவிரவாதிகளை இந்தியா அழிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதை வலுப்படுத்தும் வகையில், அனைத்து தீவிரவாத அமைப்புகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை என்று மத்திய அரசும் கூறியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் செளத்ரி நிஸ்ஸார் அலி கான் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில்,
பாகிஸ்தானை இந்தியா மியான்மர் என்று நினைத்து விடக் கூடாது. எல்லை தாண்டி எந்தப் படை வந்தாலும் பாகிஸ்தான் படைகள் தக்க பதிலடி கொடுக்கும். எனவே இதுதொடர்பாக இந்தியாவும், இந்தியர்களும் பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும்.
பாகிஸ்தானுக்கு எதிராக வெறுப்பை பரப்புவோர் தங்களது கண்களையும், காதுகளையும் நன்றாக திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் ராணுவம் எத்தகைய சூழல்நிலைக்கும் தயாராகவே உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம், இந்தியா ஆதிக்கம் செலுத்துவதை பாகிஸ்தான் ஒருபோதும் ஏற்காது என்றார் என்றார்.