"மூளையை உண்ணும் அமீபா!" தென் கொரியாவில் பதிவான முதல் மரணம்! 97% நோயாளிகளை கொல்லுமாம்!மிரளும் மக்கள்
சியோர்: சீனாவில் கொரோனா அதிகரித்துள்ளதால் உலகெங்கும் மீண்டும் கொரோனா பரவல் குறித்த அச்சமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தென்கொரியாவில் மற்றொரு கொடூர நோயால் மரணம் பதிவாகியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்பு உலகின் அனைத்து நாடுகளையும் வைத்து செய்துவிட்டது. சீனாவில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா, அதன் பிறகு உலகெங்கும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.
உலகமே சில ஆண்டுகள் முடங்கிப் போனது. கொரோனா வேக்சின் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் வைரஸ் பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்தது. இன்னுமே பொருளாதார பாதிப்புகள் சீராகவில்லை.
கொரோனா அச்சுறுத்தல்: இந்தியாவில் 7 நாட்கள் லாக்டவுன்? பரவும் தகவல் உண்மையா?
மீண்டும் பாதிப்பு
இப்போது தான் கொரோனா பரவல் குறைந்து உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது. மக்கள் அனைவரும் வழக்கம் போல தங்கள் பணிகளுக்குத் திரும்பி வந்தனர். பெரும்பாலான நாடுகள் கொரோனாவுடன் இணைந்து வாழப் பழக வேண்டும் எனச் சொல்லி கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கின. இந்தச் சூழலில் தான், யாருமே எதிர்பார்க்காத வகையில் சீனாவில் இப்போது மளமளவென வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்குப் பரவும் புதிய பிஎப் 7 வகை ஓமிக்ரான் கொரோனா வைரசே இதற்கு ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் உலக நாடுகள் சீனாவில் நிலவும் சூழலை தீவிரமாகக் கவனித்து வருகின்றன.
மூளையை உண்ணும் அமீபா
இதற்கிடையே தற்போது மற்றொரு பகீர் நோய் பரவல் தென் கொரியாவில் ஏற்பட்டுள்ளது. இதை "மூளையை உண்ணும் அமீபா" என்று ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். இதன் பாதிப்பு தென் கொரியாவில் உறுதியாகியுள்ளது. 50களில் இருக்கும் தென் கொரியாவைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் தான் தாய்லாந்து சென்று திரும்பியிருந்தார். அவருக்கு சில உடல் பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. அதில்தான் அவருக்கு நெக்லேரியா ஃபோலேரி என்ற கொடூர அமீபா பாதிப்பு இருப்பது உறுதியானது.
அறிகுறிகள்
இந்த நெக்லேரியா ஃபோலேரி அமீபா பாதிப்பால் ஒருவரது மூளையை மெல்ல அப்படியே அழிக்க முடியும். இந்த கொடூர மூளையை உண்ணும் அமீபா தொற்று என தென்கொரியாவில் கண்டறியப்படுவது இதுவே முதல்முறை. இந்த நோய் முதன்முதலில் அமெரிக்காவில் 1937ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு 15 நாட்களில் இதற்கான அறிகுறிகள் மெல்லத் தெரியத் தொடங்கும். தலைவலி, காய்ச்சல், குமட்டல் அல்லது வாந்தி ஆகியவை இதன் தொடக்க அறிகுறிகளாகும். அதன் பிறகு கடுமையான தலைவலி, அதிக வாந்தி, கழுத்து பிடித்துக் கொள்வது என அறிகுறிகள் மோசமாகும்.
உயிரிழப்பு
இப்போது உயிரிழந்த அந்த நபர் தாய்லாந்தில் சுமார் நான்கு மாதங்கள் தங்கியுள்ளார். அவர் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி தான் தென் கொரியாவுக்குத் திரும்பினார். மறுநாளே அறிகுறிகள் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தான் மூளை உண்ணும் அமீபா என்ற நெக்லேரியா ஃபோலேரி பாதிப்பு அவருக்கு இருந்தது உறுதியானது. இதையடுத்து அவருக்கு மருத்துவ குழுவினர் பல்வேறு சிகிச்சைகளை அளித்தனர் இருந்த போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அவர் கடந்த புதன்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
அதே பாதிப்பு
நெக்லேரியா ஃபோலேரியை உண்டாக்கும் மூன்று வகையான பாதிப்பைக் கண்டறிய மரபணு சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், அந்த மனிதருக்கு இந்த மூளையை உண்ணும் அமீபா பாதிப்பு இருந்தது உறுதியானது. வெளிநாடுகளில் பதிவான நெக்லேரியா ஃபோலேரி நோயாளியின் மரபணு உடன் 99.6 சதவிகிதம் இந்த நோயாளியின் மரபணு அதேபோல இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இந்த அமீபா நன்னீர் ஏரிகள், ஆறுகள், கால்வாய்கள் மற்றும் குளங்களில் காணப்படும். அமீபா மூச்சுக் காற்றின் மூலம் மனித உடலில் நுழைந்து பின்னர் மூளைக்குச் செல்கிறது.
தவிர்க்க வேண்டும்
இந்த நெக்லேரியா ஃபோலேரி அமீபா பாதிப்பு ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்குப் பரவுவது சாத்தியமில்லை என்றாலும் கூட தென் கொரிய அரசு, அந்த நோயாளி இருந்த பகுதிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள நீர் நிலைகளில் நீந்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பாதிப்பு பரவ அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட நீச்சல் மூலம் இது அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால் இந்த அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.
97% உயிரிழப்பு
நெக்லேரியா ஃபோலேரி பாதிப்பைத் தவிர்க்க நீச்சலைத் தவிர்க்கவும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கிறோம் தென் கொரியச் சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா, இந்தியா மற்றும் தாய்லாந்து உட்பட உலகெங்கும் கடந்த 2018 வரை மட்டும் 381 பேரை இந்த மூளையை உண்ணும் அமீபா கொன்றுள்ளது. கடந்த 1962 முதல் 2021 வரை அமெரிக்காவில் அதிகபட்சமாக 154 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களில் வெறும் 4 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். இதன் இறப்பு விகிதம் 97 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதே அதை மிகவும் ஆபத்தான ஒன்றாக மாற்றுகிறது.