3 போர்.. ஒரே ரிசல்ட்.! இனி எப்போதும் அந்த தப்பை பண்ண மாட்டோம்.. இந்தியா குறித்து பாக். பிரதமர் பரபர
இஸ்லாமாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவைப் பல சமயங்களில் புகழ்ந்து பேசியுள்ளார். இதனிடையே தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் இந்தியாவைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
கொரோனாவுக்கு பின்னர் வரிசையாக பல்வேறு நாடுகளும் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. முதலில் இலங்கை பொருளாதாரம் அப்படியே ஒட்டுமொத்தமாகச் சரிந்தது. இது அங்கு அரசியல் குழப்பத்திற்கும் வழிவகுத்தது.
அங்கு இன்னுமே நிலைமை சீராகவில்லை. இது ஒரு பக்கம் இருக்கப் பல நாடுகளிலும் தொடர்ச்சியாகக் குழப்பமான சூழல் ஏற்பட்டது. பாகிஸ்தானிலும் கூட இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.
பிரதமர் மோடியின் பேச்சை பாகிஸ்தானில் விழுந்து விழுந்து பரப்பும் இம்ரான் கான் கட்சியினர்..ஏன் இப்படி?
பாகிஸ்தான்
கூட்டணிக் கட்சிகளே அவருக்கு எதிராகத் திரும்ப அவர் ஆட்சியைப் பறிகொடுத்தார். அவருக்குப் பதிலாக எதிர்த் தரப்பில் இருந்த ஷெபாஸ் ஷெரீப் முதல்வராகக் கொண்டு வரப்பட்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இம்ரான் கான் வெளிப்படையாகவே தனது ஆட்சியைக் கவிழ்க்க வெளிநாட்டுச் சதி நடந்ததாகப் பல முறை குற்றஞ்சாட்டியுள்ளார். அதேநேரம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் எந்த நாட்டை பொறுத்தும் இல்லை என்றும் அவர் பல முறை பாராட்டியுள்ளார்.
ஷெபாஸ் ஷெரீப்
இந்தச் சூழலில் தற்போது ஷெபாஸ் ஷெரீப்பும் இந்தியா குறித்தும் இந்தியாவுடனான போரில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தியாவுடனான மூன்று போர்களுக்குப் பிறகு பாகிஸ்தான் பாடம் கற்றுக்கொண்டதாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், இந்தியா உடன் ஒரு அமைதியான உறவையே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். அங்குள்ள அல் அரேபியா டிவிக்கு ஷெபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் இந்தியா உடன் அமைதியான உறவையே விரும்புவதாகத் தெரிவித்தார்.
திறமையான மக்கள்
அதேநேரம் காஷ்மீரில் நடக்கும் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த நேர்காணலில் பேசிய ஷெபாஸ் ஷெரீப், "எங்களிடம் பொறியாளர்கள், மருத்துவர்கள், திறமையான தொழிலாளர்கள் உள்ளனர்.. இந்த விலைமதிப்பற்ற சொத்துகளை முறையாகப் பயன்படுத்தி வளர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்..
பாடம் கற்றுவிட்டோம்
இந்த பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வர வேண்டும்.. இரண்டு நாடுகளும் வளர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.. அமைதியாக இருந்து.. இரு நாடுகளும் முன்னேற வேண்டுமா இல்லை.. ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நேரத்தையும் வளங்களையும் வீணாக்க வேண்டுமா என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.. இந்தியாவுடன் மூன்று போர்கள் ஏற்பட்டு உள்ளன. அவை மக்களுக்கு மேலும் துயரத்தையும், வறுமையையும், வேலையின்மையையும் தான் கொண்டு வந்துள்ளன. இதில் இருந்து நாங்கள் எங்கள் பாடத்தை கற்றுக் கொண்டோம்.
வீணடிக்க விரும்பவில்லை
நாங்கள் அமைதியாக வாழ விரும்புகிறோம்.. எங்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புகிறோம்.. எங்கள் வளங்களை வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகளில் வீணடிக்க விரும்பவில்லை.. இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள் தான். இரு நாட்டு ராணுவங்களிடமும் பல அதிநவீன ஆயுதங்கள் இருக்கிறது. யோசித்துப் பாருங்கள்.. இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால் மிகப் பெரிய பேரழிவு ஏற்படும்.. யாராலும் உயிர் பிழைக்க முடியாது..
காஷ்மீர் விவகாரம்
இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்புகிறோம். அப்போது தான் இரு நாடுகளும் வளர முடியும். காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வை எட்ட முடியும்.. காஷ்மீரில் இப்போது நடப்பதை ஒரு போதும் ஆதரிக்க முடியாது. அங்கு மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. இது குறித்துப் பேசாமல் இருக்க முடியாது. காஷ்மீரில் தாங்கள் செய்வதை இந்தியா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமரின் இந்தப் பேச்சு சர்வதேச அளவில் பேசுபொருளானது.
பிரதமர் அலுவலகம் விளக்கம்
இதனிடையே ஷெபாஸ் ஷெரீப் பேச்சு குறித்து அந்நாட்டுப் பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019இல் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நடவடிக்கையை (சட்டப்பிரிவு 360 வாபஸ்) திரும்பப் பெறும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்றார். இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை முக்கியம் தான் என்றாலும் கூட இதை வாபஸ் பெறும் வரை பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரம் ஐநா தீர்மானங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தீர்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.