போர் வேண்டாம்.. பேசி தீர்க்கலாம் -ரஷ்யா உக்ரைனிற்கு அட்வைஸ் செய்யும் தலிபான் அரசு!
ரஷ்யா- உக்ரைன் நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு கருத்து தெரிவித்துள்ளது.
காபூல்: வன்முறையை அதிகரிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையிலும் ரஷ்யா- உக்ரைன் நாடுகள் ஈடுபடக்கக்கூடாது என்றும் அமைதியான பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் அரசு கருத்து கூறியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இரண்டாவது நாளாக போர் நீடிப்பதால் பதற்றம் உருவாகியுள்ளது. ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. பதிலுக்கு ரஷ்யாவும் தங்களின் நாடுகளின் மீது பொருளாதார தடை விதித்த நாடுகளின் மீது தடை விதித்து உள்ளது.
உலகம் முழுவதும் தற்போது ரஷ்யா- உக்ரைன் போர் பற்றிய செய்திகள்தான் பேசப்பட்டு வருகின்றன. மூன்றாம் உலகப்போர் மூள வாய்ப்புள்ளதாகவும் பேசி வருகின்றனர்.
போர் தொடர்பாக பல்வேறு நாடுகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அதில் ஒன்றாக தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு, போர் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து தாலிபான் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா- உக்ரைன் போர் விவகாரத்தை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் , பொது மக்களின் உயிரிழப்பு கவலை அளிப்பதாக உள்ளது.
எனவே இது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும். இதற்குமேலும் வன்முறையை அதிகரிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையிலும் இரு தரப்பும் ஈடுபடக்கக்கூடாது. மேலும்,அமைதியான பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.