அமெரிக்கா மீது அணுசக்தி தாக்குதல் நடந்தால், டிரம்ப் எங்கு ஒளிந்து கொள்வார்?
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கூறியதைப் போன்று அவருக்கும், மற்றனைத்து முன்னாள் அமெரிக்க அதிபர்களிடமும் அணுசக்தி தாக்குதலை தொடங்குவதற்கான பொத்தான் உள்ளது. ஆனால், ஒருவேளை அமெரிக்கா மீது வேறொரு நாடு அணுசக்தி தாக்குதலை நடத்தினால் டிரம்ப் எங்கு செல்வார்?
பெரும்பாலும், உடனடியாக ரகசிய இடம் ஒன்றிற்கு டொனால்டு டிரம்ப் அழைத்து செல்லப்படுவார்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் அமெரிக்க அதிபர் ஒருவர் பாதுகாப்பாக மறைந்து கொள்வதற்கென சில இடங்கள் உள்ளன. ஒன்று, வெள்ளை மாளிகைக்கு அடியில் எவ்வித தாக்குதலையும் தாங்கக்கூடிய வகையில் 1950களில் அமைக்கப்பட்ட ரகசிய இடமாகும். மற்றொன்று விர்ஜினியாவின் ப்ளூ ரிட்ஜ் மலைத்தொடரில் உள்ளது.
மேலும், டிரம்ப்பிற்கு புளோரிடாவிலுள்ள எஸ்டேட் மர்-எ-லாகோவிலும், பொதுவாக வெடிகுண்டுகளை தேக்கி வைப்பதற்கான பயன்படுத்தப்படும் வெஸ்ட் பாம் பீச்சிலுள்ள கோல்ஃப் மைதானத்தில் மற்றொரு அறையும் உள்ளது.
டிரம்ப்பின் அணுகுண்டு பதுங்கு குழிகள் குறித்து வெளிவந்துள்ள விடயங்கள் கடந்த பல தசாப்த காலங்களாக அணுசக்தி போருக்காக அமெரிக்கர்கள் தங்களை தயார் செய்து கொள்வதற்கு கையாண்ட வழிமுறைகளை பிரதிபலிக்கின்றன.
அணுசக்தி போருக்கான ஆயத்தம்
அணுசக்தி போர் என்பது சிலருக்கு நினைத்துப்பார்க்க முடியாத விடயமாக இருக்கலாம். ஆனால், அதேவேளையில் பலர் அதுகுறித்த திட்டங்களை தீட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அணுசக்தி போருக்கு தயாராவதற்கான வழிமுறைகள் பற்றியும் அல்லது போருக்கு பிந்தைய விளைவுகளை பற்றியும் அடிக்கடி பல ஆச்சர்யத்தக்க தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஆனாலும், இதுவரை நேரடியான அணுசக்தி தாக்குதலை தாங்கக்கூடிய பதுங்கு குழிகள் அமைக்கப்படவில்லை.
"மிகப்பெரிய குண்டு வெடிப்பு மற்றும் வெப்பத்திற்கு எதிரான பாதுகாப்பு இல்லை," என்கிறார் ஒன் நேஷன் அண்டர்கிரவுண்ட்: தி பால்அவுட் ஷெல்ட்டர் இன் அமெரிக்கன் கல்ச்சர் (One Nation Underground: The Fallout Shelter in American Culture) என்ற புத்தகத்தின் ஆசிரியரான கென்னெத் ரோஸ்.
"உலகமே பற்றி எரிந்தாலும்…"
ஆரம்பகட்ட தாக்குதலிலிருந்து அதிபர் தப்பித்தாலும், அவர் உடனடியாக அருகிலுள்ள பதுங்கு குழிக்கு அழைத்து செல்லப்படுவார். உலகமே பற்றி எரிந்துக் கொண்டிருந்தாலும் நாட்டை அமைதியாக வழிநடத்துவதற்கான பாதுகாப்பான இடங்கள் அதிபருக்கு தேவை.
நாட்டில் அதிகாரத்தின் உட்சபட்ச நிலையில் உள்ளவர்களாக கருதப்படும் அதிபருக்கும், மற்ற சில தனி நபர்களுக்கும் பதுங்கு குழிகளுக்குள் செல்வதற்கான அனுமதி சார்ந்த முன்னேற்பாடுகளை அமெரிக்க அரசு அதிகாரிகள் செய்துள்ளதாக 9/11 தாக்குதலின்போது வெள்ளை மாளிகையின் பதுங்கு குழியில் இருந்த கடற்படை அதிகாரியான ராபர்ட் டார்லிங் கூறுகிறார்.
- ''நான் இனவெறியாளன் அல்ல'' : அதிபர் டிரம்ப்
- சிறந்த பொய் செய்திகள்: விருதுகளை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்
டார்லிங் கூறுவதைப் போன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே அதிபருக்கான பதுங்கு குழிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, இவ்விடத்தில் சமூக அதிகாரமானது வாழ்வா, சாவா என்ற நிலைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இந்நிலையில், அரசாங்கத்தின் முக்கியமான செயல்பாடுகளில் பதுங்கு குழிகளை அமைப்பதும் ஒரு அங்கம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க அதிபருக்கோ அல்லது சாதாரண மக்களுக்கோ அணுசக்தி போருக்கு ஏற்ற முகாம்களையும், பதுங்கு குழிகளையும் அமைப்பது என்பது அதற்கு மட்டுமல்லாமல், அணுசக்தியை பற்றியோ அல்லது அணுஆயுதங்களை பற்றியோ அமெரிக்கா உலக அரங்கில் பேசுவற்கும், அணுசக்தி போர் பற்றிய விடயங்களை நம்பாதவர்களுக்கு நம்ப வைக்கவும்கூட பயன்படும்.
"அணு குடியுரிமை"
1950களில் அமெரிக்க அதிபராக இருந்த ஹாரி ட்ரூமன் முதல் முறையாக பெடரல் அரசாங்கத்தில் சிவில் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தினார். இந்த அமைப்பானது "அணு குடியுரிமை" என்ற யோசனையை ஏற்படுத்துவதற்கு உதவியதாக அமெரிக்க வரலாற்றுத்துறை பேராசிரியரான கிறிஸ்டியன் அப்பி கூறுகிறார்.
அமெரிக்க அரசாங்கம் குடிமக்கள் ஒரு புதிய யதார்த்தத்தை புரிந்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பியதாக அவர் கூறுகிறார். இதை அமெரிக்க அரசாங்கம் "அணு ஆயுதப் போட்டிகளுக்கு மக்களின் ஒப்புதலைப் பெறுவதற்கான வழியாக" கையாண்டது என்றும் அவர் விளக்குகிறார்.
நாகசாகி நகரத்தின் மீது அமெரிக்கா நடத்திய அணுசக்தி தாக்குதலில் உடனடியாக உயிரிழந்த 30 சதவீத மக்களை அங்கு கதிர்வீச்சு தடுப்பு முகாம்களை அமைந்திருந்தால் பிழைக்க வைத்திருக்க முடியும் என்று அமெரிக்க அரசின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
ட்ரூமன் உருவாக்கிய அந்த அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் நாடு முழுவதும் இதுபோன்ற முகாம்களை அமைப்பதற்கு முயற்சித்தனர். அரசாங்க ஊழியர்களுக்கும், பொதுமக்கள் சபைகளின் உறுப்பினர்களுக்கும் இதுபோன்ற சில முகாம்கள் கட்டிக்கொடுக்கப்பட்டன.
"தனிநபர் பதுங்கு குழிகள்"
குறிப்பாக பல தனிநபர்கள் தங்களுக்கான பதுங்கு குழிகளை அமைத்துக்கொண்டார்கள். அதிலொன்றுதான் மார்ஜோரி மெர்ரிவெத்தர் போஸ்ட் என்பவர் புளோரிடாவிலுள்ள மர்-எ-லாகோ தோட்டத்தில் அமைத்த பதுங்கு குழியாகும்.
போஸ்டினுடைய அந்த தோட்டத்தை 1985ல் டொனால்டு டிரம்ப் பதுங்கு குழியோடு சேர்த்து வாங்கினார். மேலும், அந்த பதுங்கு குழி தகர்க்கமுடியாத வகையில் வலுவான கட்டமைப்பை கொண்டிருந்ததாக அவர் கருத்துத் தெரிவித்து இருந்தார்.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடன் உள்ளார்: மருத்துவர்
- டிரம்ப் தேர்ச்சி பெற்ற இந்த அறிவாற்றல் தேர்வில் உங்களால் தேற முடியுமா?
மர்-எ-லாகோ தோட்டத்தில் போஸ்ட் தனக்கான ரகசிய பதுங்கு குழியை கட்டிக்கொண்டிருந்த சமயத்தில் அமெரிக்க அரச அதிகாரிகள் வெள்ளை மாளிகையில் ட்ரூமனுக்கு எதிர்காலத்தில் அமைக்கப்பட வேண்டிய பதுங்கு குழி குறித்த திட்டங்களை வகுத்துக்கொண்டிருந்தனர்.
"மொத்த அரசாங்க செயல்பாட்டையும் செய்யத்தக்க" ஒரு ரகசிய இடத்தை வாஷிங்டனிற்கு 50 மைல்களுக்கு அப்பால் அமைப்பதற்கு அதிகாரிகள் முயற்சித்ததாக மிஸ்சௌரியிலுள்ள ட்ரூமன் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தை சேர்ந்த சுவடிக் காப்பாளரான சோவெல் கூறுகிறார்.
"மலை சிகரத்துக்கு அடியிலும் பதுங்கு குழி"
அடுத்ததாக அமெரிக்காவை இலக்கு வைத்து அணுசக்தி தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க அதிபர், அவரது ஆலோசகர்கள் மற்றும் பலர் தங்குவதற்குரிய பிரம்மாண்டமான பதுங்கு குழி ஒன்று விர்ஜினியா மாகாணத்திலுள்ள ப்ளூ மவுண்ட்டின் 1754 அடிகள் கொண்ட உயர்ந்த சிகரமான மவுண்ட் வெதரில் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென மேற்கு விர்ஜினியாவிலுள்ள சுல்புர் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த இடத்தை பயன்பாட்டிலிருந்து நீக்கிய 1992 ஆம் ஆண்டுதான் இப்படி ஒரு பதுங்கு குழி இருப்பதாகவே ஊடகங்கள் வாயிலாக வெளியுலகிற்கு தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சமயத்தில்தான், மவுண்ட் வெதரில் தற்போது அமெரிக்க அரசின் அவசர மேலாண்மை கழகத்தின் கீழ் செயல்படும் பதுங்கு குழியானது மீண்டும் திறக்கப்பட்டது.
எனவே, அமெரிக்காவில் ஏதாவது தாக்குதல் நடக்கும் பட்சத்தில் இந்த இடத்திலுள்ள பதுங்கு குழிக்குதான் டொனால்டு டிரம்ப் அழைத்துவரப்படுவார்.
டூம்டே சிட்டி என்றும் அழைக்கப்படும் மவுண்ட் வெதர் பகுதியை சேர்ந்தவர்கள் பதுங்கு குழி குறித்து அறிந்துகொள்வதற்கு ஆர்வமாக உள்ளனர்.
"பனிப்போர் காலத்தில் கட்டப்பட்டவை"
1961 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தின்போது அதிபருக்கான மற்றொரு பதுங்கு குழியை கட்டுவதற்கான பணி துவங்கியது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடிக்காக 97,000 டாலர்கள் செலவில் கட்டப்பட்ட இந்த பதுங்கு குழிக்கு 'டிட்டாச்மென்ட் ஹோட்டல்' என்று பெயர் வைக்கப்பட்டதாக 1973 ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மவுண்ட் வெதர், பீனட் தீவு மற்றும் மர்-எ-லாகோ ஆகிய அனைத்து பதுங்கு குழிகளும் பனிப்போரின்போது கட்டப்பட்டது. அப்போது, "பெரும் அச்சத்துடன் கூடிய" சூழ்நிலை நிலவியபோதிலும், அச்சமயத்தில் செய்யப்பட்ட முன்னேற்பாடுகளின் மீது நம்பிக்கை இருந்ததாகவும் சோவெல் கூறுகிறார். மேலும், அப்போது கதிரியக்கத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு குழந்தைகள் தங்களை தாங்களே மூடி பாதுகாத்து கொள்ளுமாறு கோரப்பட்டது.
மர்-எ-லாகோவிலுள்ள டிரம்ப்பின் பதுங்கு குழியை பலப்படுத்துவதற்குரிய தேவையே இல்லை என்று அதன் கட்டுமானத்தின்போது மேற்பார்வை செய்த பொறியாளரான பிளாக்மான் கூறுகிறார். "ஆர்மெக்கெடோன் கட்டவிழ்த்துவிடப்பட்டால் மறைந்துகொள்வதற்கு வேறிடமில்லை" என்றும் இந்த பதுங்கு குழியானது மேசைகள், நாற்காலிகள் மற்றும் உட்புற முற்றங்களை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
- ''நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்''- ராஜபக்ஷ
- கண்ணழகி பிரியா பிரகாஷ் யார்? சமூக ஊடகங்களில் வைரலானது எப்படி?
- 20 நாட்கள் மலம் கழிக்காத இவருக்கு என்னவானது தெரியுமா?
- ரஜினியின் பாதை ஆன்மிக அரசியலா? காவி அரசியலா?