இந்த வருடம் நிலவிற்கு செல்லும் அந்த மனிதர் யார்? யார் அந்த முக்கிய புள்ளி? ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு!
பிரபல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு அனுப்ப போகும் மனிதர் குறித்த விவரத்தை நாளை வெளியிட உள்ளது.
நியூயார்க்: பிரபல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு அனுப்ப போகும் மனிதர் குறித்த விவரத்தை நாளை வெளியிட உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு மனிதர் ஒருவரை இந்த வருடம் அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. அவர் யார் என்ற அறிவிப்பு நாளை வெளியாகும். உலகமே இதற்காக பல்லை கடித்துக் கொண்டு காத்திருக்கிறது.
நிலவிற்கு மீண்டும் செல்வதில் அமெரிக்காவின் நாசா உட்பட எல்லா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் தீவிரமாக களமிறங்க பணியாற்றி வருகிறது. இதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரு முக்கியமான முதல் அடியை எடுத்து வைக்க உள்ளது.
நிலவிற்கு அனுப்ப முடிவு
நிலவிற்கு மனிதர்களை அனுப்ப பல்வேறு நாடுகள் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் 2018 இறுதியில் நிலவிற்கு மனிதர்களை அனுப்புவோம் என்று 2017ல் கூறியது. அதன் நிறுவனர் எலோன் மஸ்க், இரண்டு பேரை நிலவிற்கு அனுப்ப போகிறோம் பணிகள் நடந்து வருகிறது என்று அசால்ட்டாக ''வீடு கட்ட வேலை நடக்கிறது'' என்பது போல கூறினார்.
|
அறிவிப்பு வெளியானது
அதற்கு இடையில் எலோன் மஸ்க் தன்னுடைய டெஸ்லா நிறுவன காரை, செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பினார். இந்த வெற்றிக்கு பின்பே அவரின் நிலவு பயண திட்டம் கவனம் பெற்றது. இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவு பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இந்த வருடம் ஒருவர் நிலவிற்கு செல்ல உள்ளார் என்று கூறியுள்ளது.
யார் என்ற கேள்வி
ஆனால் நிலவிற்கு செல்ல போகும் அந்த நபர் யார் என்று ரகசியம் காக்கப்படுகிறது. இவர் பெயரை யாரும் வெளியிடவில்லை. ஆனால் இவர் மிகப்பெரிய பணக்காரர். இவர் இந்த நிலவு பயணத்திற்கு பல கோடிகளை கொடுத்துள்ளார். இவர் இந்தியரா, அமெரிக்கரா, சீனாவை சேர்ந்தவரா என்று எந்த விவரமும் வெளியாகவில்லை.
ராக்கெட் என்ன?
இதற்காக பிக் பல்கான் ஹெவி (Big Falcon Rocket) ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. பல்கான் ஹெவி ராக்கெட்தான் உலகிலேயே மிகவும் பெரிய ராக்கெட். இது பூமிக்கு வெளியே சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வர கூடிய ஆற்றல் கொண்டது. இதே ராக்கெட்டின் புதிய பெரிய வடிவம்தான் தற்போது மனிதனை நிலவிற்கு அனுப்ப பயன்படுத்தப்பட உள்ளது.
|
நீங்களா?
இந்த நிலையில்தான் டெய்லர் ஹாரிஸ் என்ற நபர், எலோன் மஸ்க் நிலவிற்கு செல்ல போகும் அந்த நபர் நீங்கள் தானே என்று கேள்வி எழுப்பியுள்ளார். பலருக்கும் இந்த சந்தேகம் எழுந்தது குறிப்பிடத்தக்கது. எலோன் மஸ்க் சில கிறுக்குத்தனமான விஷயங்கள் செய்வதில் கைதேர்ந்தவர். அதனால் அவரே அவரை நிலவிற்கு அனுப்பிக்கொள்ள வாய்ப்புள்ளது என்று கருத்து நிலவுகிறது.
|
க்ளூ கொடுத்தார்
ஆனால், எலோன் மஸ்க் இதற்கு வித்தியாசமான பதில் அளித்துள்ளார். ஒரே ஒரு கொடியை மட்டும் அவர் பதிலாக அனுப்பி உள்ளார். அது ஜப்பான் நாட்டு கொடியாகும். இதனால் எதோ ஒரு ஜப்பான் நாட்டு காரரை நிலவிற்கு அனுப்ப போகிறார்கள் என்று பேச்சு அடிபடுகிறது.
எப்போது அறிவிப்பு
இதுகுறித்த அறிவிப்பு இன்று வரும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இதன் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி, நாளை காலை 6.30 மணிக்கு, சரியாக இந்த நபர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும். அதேபோல் இந்த திட்டம் குறித்த பல முக்கிய தகவல்களும் நாளை காலை நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.
செல்வது எப்போது
ஆனால் இந்த நிலவு பயணம் எப்போது தொடங்கும் என்று சரியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வருடம் டிசம்பர் அல்லது அதற்கும் முன் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது. எந்த தேதியில் இந்த மனிதர் நிலவிற்கு அனுப்பப்படுகிறார் என்று முழு விவரம் நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.