ஓமிக்ரானின் புதிய வேரியண்ட் பிஏ.2 அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு.. ஹூ எச்சரிக்கை!
ஜெனீவா: ஒமிக்ரான் வைரசின் பிஏ.2 வேரியண்ட் ஆபத்தான வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் மாறுபாட்டான ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிக அளவில் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் டெல்டா வைரஸ் அளவுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.
தற்போது ஒமிக்ரான் வைரஸின் மாறுபாடு உலகெங்கும் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே ஒமிக்ரான் பிஏ 1 வேரியண்ட் வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது பிஏ2 வேரியண்ட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

ஒமிக்ரான்
ஒமிக்ரான் வைரசின் 'பிஏ.2' என்ற புதிய வேரியண்ட் இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட 40 நாடுகளில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வேரியண்ட், ஏற்கனவே உள்ள ஒமிக்ரான் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. அதேபோல எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது.

தடுப்பூசி
பி.ஏ.2. ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் 39 சதவீதம் அதிகம் நோய் பரப்பும் தன்மையை கொண்டிருப்பர். தடுப்பூசி செலுத்தியவர்களை விட தடுப்பூசி செலுத்தாதவர்களை தான் இந்த புதிய வேரியண்ட் அதிகம் பாதிக்கும். பூஸ்டர் தடுப்பூசிகளை நாம் தொடர்ந்து செலுத்துவது மட்டுமே பயன் தரும் என்று கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார நிலையம்
பிஏ 2 ஒமிக்ரான் வேரியண்ட் குறித்து உலக சுகாதார நிலையத்தின் இயக்குனர் கூறுகையில், ''ஒமிக்ரான் வேறுபாட்டின் நான்கு வைரஸ்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகிறது. அதில் பிஏ2 வைரஸும் ஒன்று. பிஏ1 வைரஸை விட பிஏ2 வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரியவந்துள்ளது'' என்கிறார்.

ஆபத்தான வைரஸ்
உலக சுகாதார நிலையத்தின் கொரோனா பிரிவு தலைவர் மரியா வான் கூறும்போது, ''ஒமிக்ரான் உலக அளவில் அதிகமாக பரவி வருகிறது. இப்போது பாதிப்பு அளவு குறைவாக இருந்தாலும், போகப்போக அதன் தாக்கம் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. டெல்டா வைரஸை விட குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்தினாலும், இது முதல் அலையில் பாதிப்பை ஏற்படுத்திய வைரசை போல ஆபத்தான வைரஸ்தான். தனி மனித இடைவெளி, மாஸ்க், சானிடைசர் பயன்படுத்த வேண்டும். தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications