கொரோனா தோற்றம்... வூஹான் வைராலஜி மையத்தில் ஆய்வு.. பேட் வுமனுடன் மீட்டிங்... தீவிரமடையும் விசாரணை
வூஹான்: கொரோனா தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா சென்றுள்ள ஆராய்ச்சியாளர்கள், வூஹானிலுள்ள வைராஜி மையத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹானில்கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், மெல்ல உலகெங்கும் பரவிய இந்த வைரசால் பல்வேறு நாடுகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
உலக வல்லரசுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் கூட கொரோனா பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை. கொரோனாவைச் சீன அரசு திட்டமிட்டுப் பரப்பியதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதை முற்றிலுமாக மறுத்த சீனா, கொரோனா குறித்த அனைத்து ஆராய்ச்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று அறிவித்தது.
கொரோனா தோற்றம்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இதுவரை பல்வேறு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், கொரோனாவின் தோற்றம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இதனால் கொரோனா தோற்றம் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் வரும் காலங்களில் இதுபோல மீண்டும் ஒரு வைரஸ் பரவல் ஏற்படுவதைத் தவிர்க்கவும் ஆய்வுகளை மேற்கொள்ளப்படும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. இதற்காக உலக சுகாதார அமைப்பின் விலங்கு நோய்கள் பிரிவின் உயர் நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
விலங்கு சந்தையில் ஆய்வு
ஆய்வுகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் குழு கடந்த மாதம் சீனா சென்றிருந்தது. தனிமைப்படுத்தும் காலம் முடிந்த கடந்த வாரம் தனது ஆய்வுகளை மேற்கொள்ள தொடங்கிய இந்தக் குழு, வூஹான் நகரிலுள்ள மிகப் பெரிய விலங்கு சந்தையில் சீன அதிகாரிகளுடன் ஆய்வுகளை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட ஹூபெய் ஒருங்கிணைந்த சீன மற்றும் மேற்கத்திய மருத்துவமனைக்கும் ஜின்யந்தன் மருத்துவமனை ஆகியவற்றிலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
வைரலஜி மையத்தில் ஆய்வு
இந்நிலையில், வைரஸ் பரவல் தொடங்கியது முதல் அதிகம் பேசப்படும் இடங்களில் ஒன்றான வூஹானிலுள்ள வைரலாஜி மையத்தில் வல்லுநர் குழு நேற்று ஆய்வை மேற்கொண்டது. இது குறித்து வல்லுநர் குழுவிலுள்ள பீட்டர் தாஸ்ஸாக் தனது ட்விட்டரில், "டாக்டர் ஷி ஜெங்லி உள்ளிட்ட வைரலாஜி மைய ஊழியர்களுடன் இன்று மிக ஆலோசனை. உண்மையான மற்றும் வெளிப்படையான ஆலோசனை. இதில் முக்கியமான பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன" என்று பதிவிட்டுள்ளார்.
பேட் வுமன்
வைரலஜி மைய இயக்குநர் ஷி ஜெங்லியுடன் உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் குழு ஆலோசனையில் ஈடுபட்டனர். ஷி ஜெங்லி பல ஆண்டுகளாகவே கொரோனா வைரஸ் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இவரை பேட் வுமன் என்றே ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். வைரலஜி மையத்திலிருந்து கொரோனா வைரஸ் திட்டமிட்டுப் பரப்பப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை ஷி ஜெங்லி உள்ளிட்ட பல்வேறு சீன ஆய்வார்களும் மறுத்துள்ளனர்.
பல வகை கொரோனா
இருப்பினும், சர்வதேச அளவில் மற்றொரு கருத்தும் முன் வைக்கப்படுகிறது. அதாவது கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் வூஹான் வைராலஜி மையத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதில் சீனா மீது தவறில்லை என்றும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இதை உறுதி செய்ய சீனா தான் சேமித்து வைத்துள்ள அனைத்து கொரோனா மாதிரிகளைக் குறித்த தகவல்களையும் வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்,