ஈழத் தமிழருக்காக தமிழகம் துடித்ததை போல... மியான்மர் உறவுகளுக்காக உதவிக்கரம் நீட்டும் மிசோரம்
ஐஸ்வால்: ஈழத் தமிழருக்காக தமிழகம் துடித்து எழுவதைப் போல இன்று மியான்மர் ரத்த உறவுகளுக்காக மிசோரம் மாநிலம் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறது.
மியான்மரில் ராணுவ ஆட்சியில் உச்சகட்ட அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. நாள்தோறும் துப்பாக்கிச் சூடு, படுகொலைகள் அரங்கேறுகின்றன.
தாய்லாந்து எல்லையில் உள்நாட்டு ஆயுதக் குழுவுடன் ராணுவம் யுத்தம் நடத்துகிறது. இதனால் எல்லைகளில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படுகின்றன.
மியான்மர் அகதிகள்
இந்தியாவின் வடகிழக்கு மாநில எல்லைகள் அருகே உள்ள மியான்மர் நகரங்களில் ரத்த வெள்ளம் ஓடுகிறது. இந்த அடக்குமுறைகளில் இருந்து தப்பிக்க இந்தியாவின் எல்லைய்ல் உள்ள அடர் வனப்பகுதிகளின் வழியே அகதிகளாக மியான்மர் பொதுமக்கள் நுழைகின்றனர்.
மிசோரமில் குவிந்த அகதிகள்
இதில் மிசோரம் மாநிலத்துக்குள்தான் பெருமளவு மியான்மர் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இந்த மியான்மர் மக்களுக்கு உதவி செய்வோம் என்பதில் அம்மாநில முதல்வர் சோரம்தங்கா திட்டவட்டமாக இருக்கிறார். ஆனால் மத்திய அரசு அகதிகளை அனுமதிக்க கூடாது என்கிறது.
இன உணர்வு
மிசோரம் மாநிலம் மட்டும் ஏன் இப்படியான கரிசனத்தை மியான்மர் மக்களிடம் காட்டுகிறது? இது தொடர்பாக மிசோரம் வாழ் தமிழர்களிடம் நாம் பேசினோம். மிசோரம் மாநிலத்தை பொறுத்தவரையில் சின், குக்கி, லிசோ, மிசோ என பழங்குடிகள் நிறைந்து காணப்படுகின்றனர். இவர்களில் சின் பழங்குடியினர்தான் மியான்மர் எல்லை நகரங்களில் பெரும்பான்மையினராக உள்ளனர்.
இருநாட்டு சின் மக்களின் ரத்த உறவு
மியான்மரின் எல்லை நகரில் இருந்து சின் பழங்குடிகள் பெருமளவில் மிசோரமில் குடியேறி இந்தியர்களாகவே மாறிவிட்டனர். இதனால் மியான்மர் எல்லை நகரத்துக்கும் இந்தியாவின் மிசோரம் எல்லை நகரங்களுக்கும் கொள்வினை- கொடுப்பினை என ரத்த உறவு இருந்து வருகிறது.
இன்று மியான்மர் - மிசோரம்
இதனால்தான் மிசோரம் இப்படி துடியாய் துடிக்கிறது என்கின்றனர் அந்த தமிழர்கள். அத்துடன் மிசோரமில் மியான்மர் அகதிகளுக்காக அந்த மாநில மக்கள் நிதி திரட்டுவது, உணவுப் பொருட்களை சேகரிப்பது, மருந்துகள் பெறுவது என ஒருங்கிணைக்கப்படும் நிகழ்வுகளை பார்க்கும் போது 1980களில் ஈழத் தமிழருக்காக நம் தமிழ்நாடு எப்படி உதவிக் கரம் நீட்டியதோ அதை போன்ற உணர்வுதான் இங்கேயும் இப்போது பார்க்க முடிகின்றது என்கின்றனர் மிசோரம் வாழ் தமிழர்கள்.
தொப்புள்கொடி உறவு அல்லவா?