இந்தியாவில் காற்று மாற்றி வீச ஆரம்பித்துவிட்டது: ஏசியான் உச்சிமாநாட்டில் மோடி பேச்சு
கோலாலம்பூர்: "ஏசியான் அமைப்பிலுள்ள பல ஆசிய நாடுகள், இப்பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தங்களால் ஆன பங்களிப்பை செய்துள்ளன. இப்போது இந்தியாவின் முறை. எங்களுக்கான காலம் வந்துள்ளதாக நாங்கள் உணர்கிறோம். இந்தியாவில் வீசும் காற்று மாறிவிட்டது. அதை பார்க்க உங்கள் எல்லோரையும் அழைக்கிறேன். காற்றானது, எல்லைகளை தாண்டிவீச சற்று காலம் பிடிக்கும். எனவேதான் உங்களை நான் அழைக்கிறேன்" என்று பிரதமர் நரேந்திரமோடி, ஏசியான் உச்சிமாநாட்டில் உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு 21ம் தேதியான இன்று முதல் 24ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று அவர் மலேசியா சென்றடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
PM delivers his address at the #ASEAN Business and Investment Summit 2015 pic.twitter.com/6BYCDpICYb
— PIB India (@PIB_India) November 21, 2015
இதையடுத்து ஏசியான் பொருளாதார உச்சி மாநாட்டில் மோடி பேசினார். அவர் கூறியாதாவது: உலக பொருளாதாரம் சிறப்பாக இல்லை. ஆனால் இந்தியா பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்ட கொள்கை மாற்றங்கள்தான் இந்த வளர்ச்சிக்கு காரணம். இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்து, விலைவாசி குறையத்தொடங்கியுள்ளது.
என்னை பொருத்தளவில், சீர்திருத்தம் என்பது, ஒரு நீண்ட பயணத்தின் நடுவே வரும் நிறுத்தங்கள் போன்றது. ஆனால், பயண முடிவு என்பது, இந்தியாவை முற்றிலுமாக மாற்றிப்போடுவதாக இருக்க வேண்டும்.
21வது நூற்றாண்டு ஆசியாவுக்கான நூற்றாண்டு. ஆசிய நாடுகள் அனைத்துமே சிறப்பாக செயல்பட்டுவருவது ஏசியான் நடவடிக்கைகளை ஆய்வு செய்து பார்த்தால் தெரியும். இந்தியாவும், ஏசியான் நாடுகளும் இயல்பான கூட்டாளிகள். இந்த கூட்டாளித்துவம் தொடர வேண்டும்.
உலக நாடுகளில் வர்த்தகம் குறைந்துவிட்டாலும், இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள் 4.65 சதவீத சராசரி வளர்ச்சியை அடைந்துள்ளன. துறைமுக போக்குவரத்து 11.2 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் வேகம் என்பது, 2013-14ம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு 9 கி.மீ என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதை நாங்கள் 23 கி.மீயாக உயர்த்தி துரிதப்படுத்தியுள்ளோம்.
மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் முதலீட்டாளர் நட்பு நாடாக இந்தியாவை மாற்றியுள்ளோம். இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, அறிவுசார் சொத்துரிமை, உரிமம் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
கடந்த 65 வருட பாரம்பரியத்தை மாற்றி, இந்தியாவிலுள்ள மாநிலங்களையும், நாட்டின் வெளியுறவு கொள்கையை வகுப்பதில் ஒரு பங்காளியாக சேர்த்துள்ளோம். ஒவ்வொரு கட்டத்திலும், இந்தியாவில் எங்கள் அரசு வந்த பிறகு வளர்ச்சி அதிகரித்துள்ளது.
ஏசியான் அமைப்பிலுள்ள பல ஆசிய நாடுகள், இப்பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தங்களால் ஆன பங்களிப்பை செய்துள்ளன. இப்போது இந்தியாவின் முறை. எங்களுக்கான காலம் வந்துள்ளதாக நாங்கள் உணர்கிறோம். இந்தியாவில் வீசும் காற்று மாறிவிட்டது. அதை பார்க்க உங்கள் எல்லோரையும் அழைக்கிறேன். காற்றானது, எல்லைகளை தாண்டிவீச சற்று காலம் பிடிக்கும். எனவேதான் உங்களை நான் அழைக்கிறேன். இவ்வாறு மோடி பேசினார்.