பாருங்க சார்! கட்டிப்பிடிக்கறேன்னு சொல்லி விலா எலும்பை உடைச்சுட்டான் படுபாவி! கோர்ட்டிற்கு போன பெண்
பெய்ஜிங்: சீன பெண் ஒருவர் தன்னுடன் பணியாற்றும் நபர் மீது தொடர்ந்துள்ள வழக்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சீனாவின் யுன்சி நீதிமன்றத்தில் இளம் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். உடன் பணியாற்றிய ஊழியர் மீது அந்த பெண் தொடர்ந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
சக ஊழியரால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறி இழப்பீடு கோரி அந்தப் பெண் வழக்கு தொடர்ந்து இருந்தார். இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கர்ப்பிணி கூட்டு பலாத்காரம்... 7 பேர் கொலை! விடுவித்த குஜராத் பாஜக அரசு - கொந்தளிக்கும் எஸ்டிபிஐ
வினோதம்
சீனாவின் யுயாங் நகரின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த அந்தப் பெண் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். ஒரு நாள் சக ஊழியர் உடன் பேசிக் கொண்டு இருக்கும் போது, மற்றொரு ஆண் ஊழியர் அருகே வந்து இவரை மிக இறுக்கமாக அணைத்துள்ளார். அப்போது அந்தப் பெண் திடீரென வலியால் கதறியுள்ளார். இறுக்கமாகக் கட்டிப்பிடித்ததில் அந்தப் பெண்ணுக்குப் பொறுக்க முடியாத வலி ஏற்பட்டுள்ளது.
வழக்கு
பிறகு அருகே இருந்தவர்கள் அந்த பெண்ணை ஆசுவாசப்படுத்தி உள்ளனர். இருப்பினும், வீடு திரும்பிய பின்னரும் கூட அந்தப் பெண்ணுக்கு மார்பு பகுதியில் வலி இருந்து கொண்டே இருந்துள்ளது. இதையடுத்து சூடான எண்ணெய்யைக் கொண்டு ஒத்தடம் வைத்துக்கொண்டார். அன்றைய தினம் அவர் மருத்துவமனைக்குச் செல்லவில்லை. இருப்பினும், அடுத்த ஒரே வாரத்தில் அந்த பெண்ணுக்கு மார்பு பகுதியில் வலி அதிகரித்துள்ளது. இதனால் அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
விலா எலும்பு
அங்கு அந்தப் பெண்ணுக்கு எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்த போது, பெண்ணின் விலா எலும்பில் வலது பக்கம் இரு எலும்பு, இடப்புறம் ஒரு எலும்பு என மொத்தம் மூன்று எலும்புகள் முறிந்து இருந்தது தெரியவந்தது. இதனால் அந்தப் பெண் விடுப்பு எடுத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். இதனால் வருமான இழப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டதாகவும் அந்தப் பெண் நீதிமன்றத்தில் கூறி உள்ளார்.
ஆதாரம்
சிகிச்சை பெற்று வந்த காலத்தில் அந்க ஆண் சக ஊழியரைச் சந்தித்த பெண், சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுள்ளார். இருப்பினும், தான் அரவணைத்ததால் தான் எலும்பு முறிந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதால் பணம் எதுவும் கொடுக்க முடியாது என்று அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்தே அந்தப் பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தீர்ப்பு
இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இந்திய மதிப்பில் 1.16 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர். இடைப்பட்ட காலத்தில் அந்த பெண் பார்ட்டி அல்லது வேறு எந்தவொரு நிகழ்விலும் கலந்து கொண்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதால் இந்த தீர்பை அளிப்பதாகவும் நீதிபதிகள் கூறி உள்ளனர்.