'புதிய ஆட்சியில் பெண் உரிமை பாதுகாக்கப்படும்.. ஆனால் எங்கு சென்றாலும் ஆண் துணை தேவை..' தாலிபான்கள்
காபூல்: ஆப்கனில் உள்நாட்டுப் போர் தொடர வேண்டும் என்பது யாருடைய நோக்கமும் இல்லை எனத் தெரிவித்துள்ள தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், தாலிபான் ஆட்சியில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றாலும் அவர்களுடன் துணைக்கு ஆண் உறவினர்கள் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.
Recommended Video
ஆப்கன் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும், அங்குள்ள தாலிபான்கள் ஆப்கன் ராணுவத்தின் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. அங்கு சுமார் 80% நிலத்தைத் தாலிபான்கள் ஏற்கனவே தங்கள் காட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது.
ஆப்கனில் தாலிபான்களிடம் ஒற்றை அதிகார தலைமை தேவையில்லை என்றாலும்கூட தற்போதைய அஷ்ரஃப் கானி அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படும் வரை அமைதி திரும்பாது என்று தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார்.
பிரைடு ஆஃப் சென்னை- ஹோட்டல் ராயல் லீ மெரிடியன்.. வெறும் 423 கோடிக்கு விற்றது ஏன்? பரபர காரணங்கள்!
முழு அதிகாரம் வேண்டாம்
சுஹைல் ஷாஹீன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், "அஷ்ரஃப் கானி அரசு நீக்கப்பட்டு, எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளும்போது தாலிபான்கள் தங்கள் ஆயுத போராட்டத்தைக் கைவிடுவார்கள். ஆப்கன் நாட்டில் எங்களுக்கு உட்சபட்ச அதிகாரம் வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால், கடந்த முறை அப்படி அமைந்த ஒரு அரசு வெற்றிகரமானதாக இல்லை. எனவே, அதை தவறை மீண்டும் செய்ய மாட்டோம்.
அஷ்ரஃப் கானி
ஆனால் அஷ்ரஃப் கானி அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இந்த போரைத் தொடங்கி வைத்தவரே அவர் தான். பக்ரீத் அன்று அஷ்ரஃப் கானி ஆற்றிய உரையிலும்கூட தாலிபான்களுக்கு எதிராகத் தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் எனக் கூறுகிறார். அவர் அதிபராக வெற்றி பெற்ற 2019 தேர்தலிலேயே பல்வேறு மோசடிகள் நடந்துள்ளன. எனவே, அஷ்ரஃப் கானி அதிபராக இருக்கும் உரிமையை ஏற்கனவே இழந்துவிட்டார்.
போர் இருக்காது
அமைதி பேச்சுவார்த்தை நல்ல முறையில் தொடங்கியுள்ளது. ஆனால், அஷ்ரஃப் கானி அதிபர் பதவியில் இருக்கும்போது எங்களைப் போரை நிறுத்த சொல்வது, சரணடைய வேண்டும் என வலியுறுத்துவதற்கு இணையானது. அவர்களுக்கு அமைதி திரும்ப வேண்டும் என்பது நோக்கமல்ல, எங்களைச் சரணடைய வைக்க வேண்டும் என்பதே நோக்கம். ஆனால், புதிய அரசு அமைந்த பிறகே, போர் முடிவுக்கு வரும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். புதிதாக ஒரு அரசு அமைந்த பிறகு இங்குப் போர் இருக்காது.
பெண்கள்
புதிதாக அமையும் தாலிபான்களின் அரசில் பெண்கள் வேலைக்குச் செல்லவும் பள்ளி செல்லவும், அரசியலில் ஈடுபடவும் அனுமதி அளிக்கப்படும். ஆனால், அவர்கள் கட்டாயம் புர்கா அணிய வேண்டும். மேலும், பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, அவர்களுடன் துணைக்கு ஆண் உறவினர்கள் செல்ல வேண்டும். தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் படிக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைகழகங்கள் ஏற்கனவே உள்ளது போலத் தொடர்ந்து செயல்படும்.
பேச்சுவார்த்தை மூலம்
புதிதாக நாங்கள் நிறைய மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ளோம். அதில் எங்களுக்கு புதிய ஆயுதங்கள் கிடைத்துள்ளன. இருந்த போதும், ராணுவம் மூலம் ஆட்சி கவிழ்ப்பை நடத்த நாங்கள் விரும்பவில்லை. இதுவரை நாங்கள் சுமார் 200 மாவட்டங்களை கைப்பற்றியுள்ளோம். பேச்சுவார்த்தை மூலமே அவர்கள் எங்களுடன் இணைந்துள்ளனர். ஏனென்றால் போர் மூலம் வெறும் 4 வாரங்களில் 194 மாவட்டங்களைக் கைப்பற்றுவது என்பது மிகக் கடினமான ஒரு காரியம்
உள்நாட்டுப் போர்
ஆப்கன் நாட்டில் உள்நாட்டுப் போர் இருக்கக் கூடாது என்பது தான் அனைவரது நோக்கமும் அதுதான். தாலிபான் ஆட்சியில் எந்தவொரு அடக்குமுறையும் இருக்காது என்பதை நான் உறுதி அளக்கிறேன். இத்தனை காலமாக அமெரிக்கப் படைகளுக்கு உதவியவர்களை நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். மேலும். செய்தியாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபடுவதில்லை" என்று அவர் தெரிவித்தார்.
தாலிபான் ஆட்சி
தாலிபான்களின் ஆப்கானிஸ்தானை 1996 முதல் சில ஆண்டுகள் வரை ஆட்சி செய்தது. அந்த சமயத்தில் பெண்கள் கல்வி கற்கவும் பள்ளி செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இப்போது ஆப்கனில் மீண்டும் போர் உச்சத்தில் இருக்கும் நிலையில், பல ஆயிரம் ஆப்கன் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல விசா வேண்டி விண்ணப்பித்துள்ளதாக மேற்குலக நாடுகள் தெரிவித்துள்ளன.