பயன்பாட்டுக்கு வருகிறது உலகின் முதல் '3-டி பிரின்டட்' பாலம்!
பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட உலகின் முதல் 3-டி பிரின்டட் பாலம் நெதர்லாந்தில் மக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
நெதர்லாந்து: பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட உலகின் முதல் 3-டி பிரின்டட் பாலம் நெதர்லாந்தில் மக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. 3-டி பிரின்டிங் தொழிநுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் பாலம் இதுவே ஆகும். இந்தப் பாலத்தை சைக்கிள் ஓட்டுபவர்களும், நடந்து செல்பவர்களும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
3-டி பிரிண்டர் தொழிநுட்பத்தை பயன்படுத்தி சமீப காலங்களில் நிறைய பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எந்திர கைகள், மருத்துவ பயன்பாடுகளுக்கான பொருட்கள் என நிறைய சிறிய சிறிய பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது நெதர்லாந்தில் 3-டி பிரின்டிங் தொழிநுட்பம் மூலம் பாலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்று நெதர்லாந்தின் ஜமார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்ட இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 மீட்டர் ஆகும். இது 95 சதவிகிதம் 3-டி பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்டது. மீதமுள்ள 5 சதவிகிதம் கான்கிரீட் மூலம் வடிவமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் சிறியதாக இருந்தாலும் இது மிகவும் வலுவானது எனக் கூறப்படுகிறது.
இந்தப் பாலம் 40 டிரக்குகளை ஒரே நேரத்தில் தாங்கக் கூடிய அளவிற்கு வலிமை பொருந்தியது என்று கூறப்படுகிறது. மேலும் இதன் வாழ்நாள் கான்கிரீட்டில் கட்டப்பட்ட பாலங்களைப் போலவே அதிகம் எனவும் கூறுகிறார்கள். இந்தப் பாலம் 800 அடுக்குகளான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தை உருவாக்கிய நெதர்லாந்த் பொறியாளர்கள் குழு செய்தியாளர்களிடம் பேசிய போது "இந்தப் பாலத்தை உருவாக்க மொத்தமாக 3 மாதம்தான் ஆனது. சாதாரண பாலத்தை உருவாக்கும் செலவில் பாதிதான் ஆனது. உலகிலேயே இதுதான் முதல் 3-டி பிரின்டிங் பாலம். இதை வடிவமைத்ததில் எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி'' என்றனர்.