இந்தியாவும் சீனாவும் பகையாளிகள் கிடையாது, பங்காளிகள்: சீன அதிபர் "ஐஸ் ஐஸ்"!!
ரியோடி ஜெனிரோ: இந்தியாவும் சீனாவும் எதிரிகள் கிடையாது, கூட்டாளிகள் என்று அந்த நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். "உலக அளவிலும், பிராந்தியவாரியாகவும் பார்த்தால், இந்தியாவும், சீனாவும், பகையாளிகள் கிடையாது, கூட்டாளிகள்" என்றும் அதிபர் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திரமோடியை, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய சீன அதிபர் மேலும் கூறியதாவது: சீனாவும், இந்தியாவும் சந்தித்துக்கொண்டால் அதை உலகமே உன்னிப்பாக கவனிக்கும். இரு நாடுகளும் ஒரே குரலில் எதையாவது கூறினால் அதை உலக நாடுகள் கவனித்து கேட்கும். அந்த அளவுக்கு பல துறைகளில் இரு நாடுகளும் உலகின் அசைக்க முடியாத சக்திகளாக உள்ளன.
நரேந்திரமோடி தலைமையிலான அரசுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது. இரு நாடுகளும் ஒருங்கிணைந்து தங்களது வாய்ப்புக்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும், அமைதியும், வளர்ச்சியும் ஏற்பட வகை செய்ய வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம். இவ்வாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். நரேந்திரமோடியும், சீனாவுடன் நல்லுறவை பேண இந்தியா தயாராக இருப்பதாக கூறினார்.