இதே மாதிரி நமக்கு டீச்சர் கிடைச்சுருந்தா? கோமாளி வேடம் போட்டு கணக்கு! அசத்தும் ஆசிரியை யுவராணி!
காஞ்சிபுரம் : மாணவர்களுக்கு கணிதத்தின் மீதான ஆர்வத்தினை ஏற்படுத்தி உற்சாகத்துடன் கற்றிட அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் கையிலெடுத்த ஆயுதம் தான் கோமாளி வேடம்... கணித வகுப்புகளில், பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, கதை சொல்லி வரும் யுவராணி குறித்து பார்க்கலாம்..
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு தனித்திறன்கள் அவர்களுக்குள்ளேயும் பொதிந்து கிடக்கிறது. இதனை சரியாக உற்றுநோக்கி குழந்தைகளை ஊக்குவித்தால், இன்னும் தன்னம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் சமூகத்தில் வெற்றி நடை போடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
தன்மகன் மருத்துவராக வேண்டும் பொறியாளராக வேண்டும் பெரிய தொழிலதிபராக வேண்டும் என பெற்றோர் நினைத்தாலும் அவர்களை கண்ணுக்கு கண்ணாக பார்த்து அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவது ஆசிரியர்களின் பணி. ஆசிரியர்கள் தான்..
அரசு பள்ளி ஆசிரியை
வாழ்வில் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் ஆசிரியர்களை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. சில ஆசிரியர்கள் மீது குறிப்பாக அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், ஏராளமான ஆசிரியர்கள் மாணவர்களின் நலனுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்து பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் தான் நாம் ஒரு ஆசிரியர் குறித்து பார்க்கப் போகிறோம். அவர்தான் காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியையான யுவராணி.
ஆசிரியை யுவராணி
நாம் பார்த்த மற்ற ஆசிரியர்களுக்கும் ஆசிரியை யுவராணிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இது போன்ற ஒரு ஆசிரியை நீங்கள் கேள்விப்பட்டிருக்க கூட வாய்ப்பில்லை. கணக்கு என்றாலே அலறி ஓடும் குழந்தைகளைக்.. கணிதத்தின் மீதான ஆர்வத்தினை ஏற்படுத்தி உற்சாகத்துடன் கற்றிட இன்று கையிலெடுத்த ஆயுதம் தான் அவர் எடுத்த கோமாளி வேடம்... கணித வகுப்புகளில், பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, கதை சொல்லி என.. 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு.... வித்தியாசமாய் கணித வகுப்பு நடத்தி வருகிறார்.
கோமாளி வேடம்
இதைத் தவிர்த்து கணித பாடத்தில் மாணவர்களுக்கு மேலும் ஆர்வத்தினை ஏற்படுத்திட வில்லுப்பாட்டு வாயிலாகவும் பொம்மலாட்டம் வாயிலாகவும் கற்பித்து வருகிறார். இந்திய கணித மேதைகளில் ஒருவரான "மனித கம்ப்யூட்டர்" என்று அழைக்கப்படும் சகுந்தலா தேவி அவர்களை பற்றி பாடம் எடுக்க சகுந்தலா தேவியாகவே மாறி மாணவர்களிடையே சென்று அவரைப் பற்றிய வாழ்க்கை குறிப்பையும், கணித பாடத்தில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தைப் பற்றியும் அக்கதாபாத்திரமாகவே மாறி கற்பிக்கிறார்.
நல்லாசிரியர் விருது
இதுமட்டுமல்லாது, கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் கிளாஸ் அதாவது மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மட்டுமே அச்சமயம் ஆன்லைன் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆன்லைன் கிளாசில் Zoom app வழியாக நடத்தும் பொழுது கணித பாடம் மாணவர்களுக்கு சரியாக விளங்கவில்லை. அதனால் அவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தினார். மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், கணித பாடத்தினை எளிமையாக கற்பிக்க இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கியுள்ளது.
மக்கள் பாராட்டு
கணக்கு என்றால் கசக்கும், கணக்கு ஆசிரியர்கள் என்றால் எட்டடிதூரம் எட்டிப் பாயும் மாணவர்களுக்காக தன்னையே குழந்தையாய் மாற்றிக் கொண்டு பாடம் கற்பிக்கும் ஆசிரியை யுவராணி போன்றவர்கள்தான் ஆசிரியர் சமூகத்தின் இன்றைய தேவை. அவர்களை பாராட்ட வேண்டியதும் நமது முக்கிய கடமை.