நல்லா தான் போச்சு.. கடைசில வச்சாரே ட்விஸ்ட்.. ஈபிஎஸ் ஆதரவாளர் பேச்சால் அதிர்ந்துபோன மேடை!
காஞ்சிபுரம் : அதிமுக பொதுக்கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு தலைமை ஏற்றுள்ளார் எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடைமொழிகளை எல்லாம் சொல்லிப் புகழ்ந்த ஈபிஎஸ் ஆதரவாளர், கடைசியில் ஓபிஎஸ் என பிளேட்டை மாற்றிப் போட்டதால் மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே சுதாரித்துக்கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ பழனி, மன்னிப்புக் கேட்டு ஈபிஎஸ் என தனது பேச்சை மாற்றிக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்.
அதிமுக மோதல் விவகாரம் தொடர்ந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஒருவர் ஓபிஎஸ்ஸை பொதுச் செயலாளர் எனப் பேசிய வீடியோவை ஓபிஎஸ் தரப்பினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
“நம்ம குறி அதுதான்.. பிரச்சனை பண்ணாதீங்க” - அமித்ஷா கொடுத்த சிக்னல்.. என்ன செய்யப்போகிறார் ஈபிஎஸ்?
கவனம் ஈர்க்கும் ஈபிஸ் அணி
அதிமுகவில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கட்சியில் தனது பலத்தை நிரூபிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே திமுக அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தியுள்ள நிலையில், தற்போது பொதுக்கூட்டங்கள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறது எடப்பாடி பழனிசாமி டீம்.
முன்னாள் அமைச்சர்
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநல்லூர் பகுதியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ பழனி ஆகியோர் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.
தலைமையேற்றுள்ள ஓபிஎஸ்
ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ பழனி, எடப்பாடி பழனிசாமியை புகழ்வதற்காக அடைமொழிகளைக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார். குடிமராமத்துப் பணிகளின் நாயகன் என்றெல்லாம் புகழ்ந்த அவர், தவறுதலாக கழகத்திற்குத் தலைமையேற்றுள்ள 'ஓபிஎஸ்' எனக் கூறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மன்னிப்பு கேட்டு, ஈபிஎஸ் என்று மாற்றிப் பேசினார்.
ஓபிஎஸ் பொதுச் செயலாளரா
எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்தப் பொதுக்கூட்டத்தில், ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனி, ஓ.பன்னீர்செல்வத்தை கழக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டுப் பேசியதால் மேடையில் இருந்தவர்களும், தொண்டர்களும் அதிர்ச்சியடைந்த நிலையில், அவர் உடனடியாக மாற்றியது சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவை ஓபிஎஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர்.