மறுபிறவி எடுத்து வந்த டி.ராஜேந்தர்..வழக்கறுத்தீஸ்வரரிடம் வைத்த பலமான கோரிக்கை..மருமகள் வருவாளா?
காஞ்சிபுரம்: எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன் என்று அவரது தந்தை டி.ராஜேந்தர் கூறியுள்ளார். இந்த கோரிக்கையை அவர் சிறப்பாக நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
திரும்பிய திசையெல்லாம் கோவில்கள் நிறைந்த காஞ்சியில் விஐபிக்கள் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் மட்டும் அரசியல்வாதிகளுக்கு சிறப்பான கோவிலாக உள்ளது. முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் குறித்து கருத்து வேறுபாடு எழுந்தது. இது தொடர்பான உண்மைத் தன்மையை அறிய, காஞ்சிபுரத்தில் விசேஷமாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம்.
அவர்களுடைய வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், அவர்கள் முன் தோன்றி, அவர்கள் பிரச்னையை தீர்த்து வைத்தாராம். இறைவனே நேரில் வந்து வழக்கை தீர்த்து வைத்ததால், இக்கோவிலில் உள்ள இறைவன், 'வழக்கறுத்தீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.
டி ராஜேந்தர் வயிற்றில் ரத்தக் கசிவு.. சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாக சிம்பு அறிக்கை
வழக்கறுத்தீஸ்வரர்
அக்காலத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எழுந்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்தரப்பினரை இக் கோவிலுக்கு அழைத்துவந்து சத்தியம் செய்ய சொல்வார்கள். காரணம் பொய் சத்தியம் செய்தால் அவர்களது குடும்பம் அழிந்துவிடும் என்பது இக்கோவிலின் மீதான பெரும் நம்பிக்கை. காஞ்சிபுரம் காந்தி வீதியில் உள்ள இக்கோவிலில் வழக்குகளில் சிக்கி நிம்மதி இழந்தவர்கள் சிறப்பு பூஜை செய்தால் வழக்குகளிலிருந்து விடுபடுவார்கள் என்பது கோவிலின் தல வரலாறு. அதனால்தான் அரசியல்வாதிகளால் நிரம்பி வழிகிறது இக்கோவில்.
டி.ராஜேந்தர்
திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரும் , இலட்சிய திமுக வின் நிறுவனம்,தலைருமான டி ராஜேந்தர் இன்று கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், வழக்குகளை தீர்க்கும் தளமாக விளங்குகின்ற பிரசித்திப்பெற்ற ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் காமாட்சி அம்மன் திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
சிலம்பரசன் ஜாதகம்
காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு வருகை புரிந்த டி.ராஜேந்தர் தனது மகன் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து நவகிரக வழிபாடு மற்றும் மூன்று முறை கோயிலை வலம் வந்து , கொடிமரம் அருகே விழுந்து மிகுந்த பயபக்தையுடன் தனது வேண்டுதலை கோரிக்கையாக வைத்தார்.
திருமண தடை நீங்க தீபம்
அதன் பின் மூன்று நெய் தீப விளக்கு ஏற்றி கொடிமரம் , மூலஸ்தானம் அமைந்த பகுதியை நோக்கி தீப பூஜை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து 12 திருவிளக்கு ஏற்றியும்,கோவில் நந்தி பகவானிடம் தனது வேண்டுதலை மனமுருகி வேண்டி க்கொண்டார்.
மறுபிறவி
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர்,தான் மறுபிறவி எடுத்துள்ளதாகவும் , கடந்த முறை பீப் பாடல் பிரச்சனையின்போது இங்கு வந்து தனது குறைகளை வழக்கறுத்தீஸ்வரரிடம் கோரிக்கையாக வைத்த நிலையில்,சுமுகமாக பிரச்சனை தீர்ந்தது என்று கூறினார். இதனைத் தொடர்ந்து சிலம்பரசன் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மருமகள் வர வேண்டுதல்
அந்த கேள்விக்கு பதில் அளித்த டி.ராஜேந்தர், எனக்கு எனது மனைவிக்கு பிடித்த பெண் என்பதை தவிர்த்து எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை , குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன். இந்த கோரிக்கையை அவர் சிறப்பாக நிறைவேற்றுவார் என்பதும் , இதேபோல் சிலம்பரசன் திருமணத்தை அவரது ரசிகர்கள் உள்ளிட்ட நல் உள்ளங்கள் அனைவரும் ஆதரவுடன் விரைவில் நடக்கும் எதிர்பார்க்கிறேன் எனவும் தெரிவித்தார்.