திமுகவுக்கு பிரஷர்.. சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக திருமா.. களமிறங்கிய 3 கூட்டணி கட்சி தலைகள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளர்கள் சிஐடியூ தொழிற்சங்கம் அமைக்க அனுமதி கோரி போராடி வரும் நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அரசால் முடிவெடுக்க முடியவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனை திமுகவின் கூட்டணியில் உள்ள திருமாவளவன், முத்தரசன், கே பாலகிருஷ்ணன் ஆகியோர் எதிர்த்துள்ளனர். இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும் என்று சாம்சங் தொழிலாளர்களை இன்று நேரில் சந்தித்த பிறகு 3 தலைவர்களும் கூறியுள்ளதோடு, முதல்வரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்த உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இந்த போராட்டம் நடந்து வருகிறது.

அதாவது ஊதிய உயர்வு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல், பணி இடைவேளை, 8 மணி நேர ஷிப்ட, குழந்தைகளுக்கான பள்ளி வசதி, மருத்துவ காப்பீடு, இலவச டீ, காலை உணவு, தீபாவளி - பொங்கல் போனஸ், சிஐடியூ தொழிலாளர் யூனியன் அமைப்பது உள்பட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் 15 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாறாக சிஐடியூ யூனியன் அமைக்கும் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
போராட்டம் தொடர்ந்ததால் தமிழக அரசு தலையீட்டது. அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, தாமோ அன்பரசன், சிவி கணேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பேச்சுவர்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இத்தகைய சூழலில் தான் போலீசார் மற்றும் போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து இன்று காலையில் 7 தொழிலாளர்கள் வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 2 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. மேலும் போராட்ட பந்தல் அகற்றப்பட்ட நிலையில் சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் சாம்சாங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்களான கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் இன்று சாம்சங் தொழிலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அமைதியாக போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்ததை அவர்கள் கண்டித்தனர். மேலும் தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர். இதனால் ஆளும் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் பற்றி தமிழக அரசு விளக்கம் ஒன்றை அளித்து இருந்தது. அதில் அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால் காவல்துறை கைது செய்து பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது. அதே போலதான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்து விடுவிக்கப்பட்டனர். யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை. சிஐடியூ தொழிற்சங்கத்தை அரசு அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை. அப்பகுதியில் இயங்கும் பல தொழிற்சாலைகளில் இந்த சங்கத்தை அரசு அங்கீகரித்துள்ளது.
சாம்சங் நிறுவனம், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அரசு முடிவெடுக்க முடியவில்லை. உத்தரவு எப்படி வந்தாலும் அரசு அதனை செயல்படுத்தும். பல கோரிக்கைகளை ஏற்க நிறுவனம் முன்வந்துள்ளதால், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும், என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும். சிஐடியூ தொழிற்சங்கம் அமைக்க அரசு சார்பில் அனுமதி வழங்க வேண்டும். இதுபற்றி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறியுள்ளனர். இதனால் ஆளும் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications