பாஜகவின் அந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.. அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி
கன்னியாகுமரி: மத துவேஷத்தை உருவாக்கி தி.மு.கவின் வாக்கு வங்கியை கைப்பற்ற நினைக்கிறது பா.ஜ.க. இந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவிதாங்கோடு அரசு நடுநிலைப் பள்ளிக்குச் சென்று பள்ளிக்கு வந்த மாணவர்களை இனிப்புகள் மற்றும் பூ கொடுத்து அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றார்.
பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்துக்களுக்கு விரோதி தி.மு.க என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் க்ளீன் ஸ்வீப்! டெபாசிட்டை இழந்து தோற்ற பாஜக! பின்னணியில் 5 காரணங்கள்
பாஜகவிற்கு பிடிக்கவில்லை
இதற்குப் பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "ஆடு நனைகிறது என ஓநாய் அழுவதைபோல் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பேச்சு உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் மற்றும் அனைத்து சாதியினரும் ஆலயத்திற்குள் நுழையலாம் என்ற தி.மு.கவின் நிலைப்பாடு பா.ஜ.கவுக்கு பிடிக்கவில்லை.
வாக்கு வங்கி
இதனால், மத துவேஷத்தை உருவாக்கி தி.மு.கவின் வாக்கு வங்கியை கைப்பற்ற நினைக்கிறது பா.ஜ.க. இந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அனைத்துத் துறைகளிலும் மின்னணு வசதி ஆக்கப்படுவதால் தகுதியான மக்களுக்கு அரசு சேவைகள் சென்றடைய வழிவகுக்கும்" என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
ஓ பன்னீர்செல்வம்
இதனிடையே அம்மா உணவகங்களில் ஆட்குறைப்பு நடப்பதாகவும், அவற்றை மூட அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுபற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட பதிவில், 'ஏழைகளின் பசியாற எளிதாய் உணவளித்து அன்னையின் பரிவோடு, அவசிய உணவளித்த அம்மா உணவகத்தை திமுக அரசு மூடக் கூடாது.
அண்ணாமலை கோரிக்கை
மக்கள் பயன்படுத்தும் மகத்தான திட்டத்தை மாற்றுக் கட்சி தொடங்கியதால் மறுக்கக் கூடாது. விருந்தோம்பல் நம் மரபாகும். எனவே, ஏழைகளின் பசிப்பிணி போக்கும் அம்மா உணவகத்தை எதிர்க்காமல் தொடர வேண்டும்' இவ்வாறு அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.