நல்லா இருக்கீங்களா? வெளிநாட்டு டூர் ப்ளான் என்னாச்சு! ‘வில்லேஜ் குக்கிங்’ சேனலை மறக்காத ராகுல்காந்தி
கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் மூன்றாவது நாளாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி தனது நடை பயணத்தின் போது வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்தவர்களுடன் மகிழ்ச்சியாக பேசியதோடு உங்களது உங்களது வெளிநாட்டு டூர் செல்லும் முயற்சி எந்த அளவில் இருக்கிறது என விசாரித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து நடை பயணத்தை தொடங்கிய அவர், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 48 நாட்கள் 3,700 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார்.
ராகுல்காந்தி
குமரி மாவட்டத்தில் மட்டும் 10ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் 2 நாள் பயணம் முடிவடைந்த நிலையில், இன்றும் 3வது நாளாக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் நடைபயணத்தை மேற்கொண்டார். இதற்காக ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்த நிலையில், வழி நெடுகிலும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் என உற்சாக வரவேற்பளித்தனர்.
நடை பயணம்
நாளையுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடை பயணத்தை காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி நிறைவு செய்ய இருக்கும் நிலையில் இன்று காலை நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கல்லூரியிலிருந்து மூன்றாவது நாள் நடை பயணத்தை தொடங்கினார். தக்கலை வரை இன்று ராகுல் காந்தி நடைபயணம் செய்ய திட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த பயணத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசினார்.
வில்லேஜ் குக்கிங் சேனல்
குறிப்பாக தமிழக விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் ராகுல் காந்தியை சந்தித்து பயிர் காப்பீடு மழைக்காலங்களில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கை குறித்து விளக்கம் அளித்தார். இதையெல்லாம் கூர்ந்து கவனித்த ராகுல் காந்தி விவசாயிகளை கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதற்கான முயற்சியில் அனைத்தையும் மேற்கொள்வேன் என உறுதி அளித்தார்.
உற்சாகமான ராகுல்
தொடர்ந்து பொதுமக்களை சந்தித்தவாறு நடை பயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தியை வில்லேஜ் குக்கிங் யூட்யூப் சேனலை சேர்ந்தவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் நடை பயணம் சென்றனர் அவர்களை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த ராகுல் காந்தி அனைவரும் நலமாக இருக்கிறீர்களா? இன்று எனக்காக என்ன சமைத்து எடுத்து வந்தீர்கள்! என கேட்டு சிரித்ததோடு உலகம் முழுவதும் சென்று சமைக்க வேண்டும் என ஏற்கனவே என்னிடம் கூறி இருந்தீர்களே தற்போது அந்த திட்டமெல்லாம் எப்படி இருக்கிறது என கேட்டார்.
காளான் பிரியாணி
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் வெளிநாடுகளுக்கு செல்ல இருப்பதாக வில்லேஜ் குக்கிங் youtube சேனலை சேர்ந்தவர்கள் கூறினர் தொடர்ந்து அவருடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்ட ராகுல் காந்தி தனது நடை பயணத்தை தொடர்ந்தார். ஏற்கனவே கடந்த முறை தமிழகம் வந்திருந்த போது வில்லேஜ் குக்கிங் youtube சேனலை சேர்ந்தவர்களுடன் ராகுல் காந்தி காளான் பிரியாணி சமைத்து ஒன்றாக சாப்பிட்டது இந்தியா முழுவதும் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.