விட்டதைப் பிடித்து ‘கொடி’ நாட்ட கணக்கு போட்ட மாஜி! வாரிசுக்கு பதவி பெற பரபர மூவ்! “அதே ரூட்”.. ஆஹா!
கன்னியாகுமரி : திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர் பதவிகளுக்கான நேர்காணல் விரைவில் நடைபெறும் என இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த நிலையில், இந்த பதவிகளைப் பெற பெரும் போட்டியே நடக்கிறதாம். குமரி மாவட்ட அரசியலில் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், தனது மகனுக்கு மாநகர அமைப்பாளர் பதவியைப் பெற்று, மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறாராம்.
திமுக இளைஞரணியில் பதவி பெற இளைஞர்கள் இடையே மிகுதியான ஆர்வம் காணப்படுகிறதாம். உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியினருக்கு எம்.பி., எம்.எல்.ஏ சீட்கள் என எளிதாக வளர்ச்சி ஏற்படும் எனக் கருதப்படுவதால், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும், தங்கள் வாரிசுகளுக்கு இளைஞரணியில் பதவி பெற்றுத்தர முயற்சிக்கின்றனராம்.
மாநில இளைஞரணி துணை செயலாளர் பதவிக்கு, எந்த சிபாரிசையும் ஏற்காமல் ஆட்களை தேர்வு செய்த உதயநிதி ஸ்டாலின், மாவட்ட, மாநகர அமைப்பாளர் பதவிகளுக்கு விரைவில் சென்னை அன்பகத்தில் நேர்காணல் நடத்த இருக்கிறார்.

திமுக இளைஞரணி அமைப்பாளர்
திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர பொறுப்புகளில் போட்டியிட விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இளைஞரணிக்கு மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான நேர்காணல் அன்பகத்தில் நடைபெறும் என்று அறிவித்தார்.

பெரிய போட்டி
அதன்படி, அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இளைஞரணி நிர்வாகிகள், இந்தப் பதவிக்கு விண்ணப்பங்களை அளித்து வருகின்றனர். திமுக இளைஞரணியில் சேர்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் தங்கள் வாரிசுகளுக்கு மாநில இளைஞரணி பொறுப்பைப் பெற்றுத் தர முயன்றனர். மாநில பொறுப்புகளில் சிபாரிசுகளை ஏற்காமல், மாவட்ட அமைப்பாளர்களில் சிறப்பாகச் செயல்பட்டவர்களையே நியமித்த உதயநிதி ஸ்டாலின், அவர்களிடம் மாவட்ட பொறுப்புகளை அளிப்பதாகச் சொல்லி இருக்கிறாராம். இதனால், பல மாவட்டங்களில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பதவிகளுக்கு பெரும் போட்டி நடக்கிறதாம்.

மகனுக்கு பதவி - அதே ரூட்டில் மாஜி
இந்நிலையில் தான், திமுக முன்னாள் அமைச்சரும், தணிக்கைக்குழு உறுப்பினருமான சுரேஷ் ராஜன், தனது மகன் தமிழரசனுக்கு எப்படியாவது நாகர்கோவில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் பதவியைப் பெற்றுத் தர வேண்டும் என்று காய்நகர்த்தி வருகிறாராம். குமரி மாவட்ட திமுக செயலாளராக சுமார் கால் நூற்றாண்டு காலம் கோலோச்சி வந்த தனது பதவி பறிக்கப்பட்டு விட்டதால், தனது மகனுக்கு இளைஞரணியில் முக்கிய பொறுப்பைப் பெற்றுக்கொடுத்து, குமரி மாவட்ட அரசியலில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட முயற்சித்து வருகிறாராம் சுரேஷ் ராஜன். சுரேஷ் ராஜனும் ஆரம்ப காலகட்டத்தில் இளைஞரணி பொறுப்பில் இருந்தவர் தான். அதே ரூட்டில் தனது மகனையும் களமிறக்கி உள்ளார்.

சுரேஷ் ராஜன்
1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்தார் சுரேஷ் ராஜன். அப்போது தான் முதல்முறையாக எம்.எல்.ஏ.வான கன்னியாகுமரியைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் சுற்றுலாத்துறை அமைச்சரானார். அதற்கு பிறகு, திமுகவில் ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பொறுப்பு சுரேஷ் ராஜனுக்கு வழங்கப்பட்டது. பின்னர் மாவட்டம் இரண்டாகப் பிரிந்தபோது குமரி கிழக்கு மா.செ ஆனார். சுரேஷ் ராஜன் 23 ஆண்டு காலம் திமுகவில் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார்.

ஸ்டாலினுடன் நெருக்கம்
மாவட்ட செயலாளர் ஆவதற்கு முன்பு இளைஞரணியில் பொறுப்பு வகித்தவர் என்பதால் பல ஆண்டுகளாக ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து வந்தார் சுரேஷ் ராஜன். கட்சியைத் தாண்டி ஸ்டாலினின் குடும்ப நண்பராகவும் இருந்தார். 2006 தேர்தலில் திமுக வென்றபோது மீண்டும் அமைச்சரானார் சுரேஷ்ராஜன். கடந்த சட்டமன்றத் தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் சுரேஷ் ராஜன் தோல்வியடைந்ததால், அமைச்சரவையில் இடம்பிடிக்க முடியாமல் போனது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோ தங்கராஜ் அமைச்சர் ஆனார்.

உள்ளாட்சி தேர்தல் பஞ்சாயத்து
கடந்த மார்ச் மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாகர்கோவில் மேயர் பதவியை கைப்பற்றும் விவகாரத்தில் தலைமை உத்தரவை மீறி சுரேஷ் ராஜன் தன்னிச்சையாக செயல்பட்டு வந்துள்ளார். மேயராக மகேஷ் வெற்றி பெற்ற நிலையில், சுரேஷ் ராஜனின் ஆதரவு கவுன்சிலர்கள் அவருக்கு எதிராகச் செயல்பட்டதாக புகார் எழுந்தது. திமுக வேட்பாளருக்கு எதிராகச் செயல்பட்டு, பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு உதவுவதாக சுரேஷ் ராஜன் குறித்து தலைமைக்கும் புகார் சென்றது. இதனால், கடும் கோபமடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுரேஷ் ராஜனை, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்.

ஆச்சர்யம்
இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலினை பலமுறை நேரில் சந்திக்க சுரேஷ் ராஜன் முயற்சித்தார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. குமரிக்கு முதக்வர் ஸ்டாலின் ஆய்வுக்குச் சென்றபோதும் சுரேஷ் ராஜனுடன் பேசவில்லை. ஸ்டாலினுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்த சுரேஷ் ராஜனே பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டது குமரி மாவட்ட திமுகவினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஓரங்கட்டப்பட்டார்
சுரேஷ் ராஜன் கட்சிப் பதவி இல்லாமல் அமைதியாக இருந்து வந்ததால், அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கைகள் ஓங்கின. கன்னியாகுமரி அரசியலில் சுரேஷ் ராஜன் கடுமையாக ஓரங்கட்டப்பட்டார். இந்நிலையில், திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் முடிந்து, திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், குமரி மாவட்டத்தின் திமுக முகமான சுரேஷ் ராஜனுக்கு மீண்டும் இடம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், சுரேஷ் ராஜனுக்கு மட்டுமல்லாமல், அவரது ஆதரவாளர்களுக்கும் பொறுப்புகள் கிடைக்கவில்லை.

மகன் மூலம் நிலைநாட்ட திட்டம்
இந்நிலையில், திமுக தலைமை, பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், தணிக்கைக்குழு உறுப்பினர்களை சமீபத்தில் நியமனம் செய்தது. அதில், திமுக தணிக்கைக்குழு உறுப்பினராக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் நியமிக்கப்பட்டார். திமுக தலைவர் ஸ்டாலின் சமாதானமாகி, சுரேஷ் ராஜனுக்கு இந்தப் பதவியைக் கொடுத்ததால், அவரது ஆதரவாளர்கள், மீண்டும் அண்ணணின் கை ஓங்கும் என உற்சாகமடைந்தனர். இந்நிலையில், மீண்டும் குமரி மாவட்ட அரசியலில் தனது செல்வாக்கை நிலைநாட்டும் வகையில், இளைஞரணி மாநகர அமைப்பாளர் பதவியை தனது மகனுக்கு பெற்றுத் தர மூவ் செய்து வருகிறார் சுரேஷ் ராஜன். தன்னைப் போலவே, மகனையும் இளைஞரணி மூலம் உயரங்களுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார் சுரேஷ் ராஜன் என்கிறார்கள் குமரி மாவட்ட திமுகவினர்.












Click it and Unblock the Notifications