தேர்தல் நாளில் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல கட்டணமில்லா பஸ் வசதி: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கன்னியாகுமரி: தேர்தல் தினத்தன்று 60 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கட்டணமில்லா பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
வருகிற ஏப்ரல் 23-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் மண்டலம் இணைந்து தேர்தல் நாளன்று வாக்களிக்கச் செல்லும் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண் வாக்காளர்களான மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் சாதாரண நகரப் பஸ்களில் கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
60 வயதிற்கு மேற்பட்ட ஆண் வாக்காளர்களான மூத்த குடிமக்கள், பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து சாதாரண கட்டண நகர பஸ்களிலும் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க இந்த வசதி பொருந்தும்.
மேலும் மேற்குறிப்பிட்ட தகுதியுள்ள வாக்காளர்களை பஸ்களில் ஏற்றுவதிலும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதிலும் கனிவுடன் நடந்து கொள்ளுமாறும், தேர்தல் நாளன்று பஸ் நிறுத்தங்களில் காத்திருக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டுமென அனைத்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் திருவிழாவில் எவ்வித தடையுமின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும். குறிப்பாக உடல்நலக்குறைவு அல்லது போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறிவிடக்கூடாது. வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, கடமையுமாகும். வாக்குரிமை பெற்ற அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications