மனைவியை அடிக்காதே என்ற சப் இன்ஸ்பெக்டர்... கள்ளத்தொடர்பு என வீடியோ போட்ட கணவன் - குமரியில் பரபரப்பு
குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தியவரை அட்வைஸ் செய்து அனுப்பிய சப் இன்ஸ்பெக்டர் மீது அவதூறாக புகார் கூறி பதிவிட்டுள்ளார் ஒரு நபர்.
கன்னியாகுமரி: கணவன் மனைவி சண்டையில் தலையிட்டு சமாதானம் செய்து வைத்த களியக்காவிளை சப் இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் மீது அந்த பெண்ணின் கணவரே கள்ளத் தொடர்பு புகார் கூறி வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவிட்டு பரபரப்பு புகார் கூறியுள்ளார். சபரிமலை போராட்டத்தின் போது சிறப்பாக பணியாற்றியதற்காக கேரளா மாநில அரசால் கவுரவிக்கப்பட்டவர் மோகன அய்யர். அவர் மீது கள்ளத் தொடர்பு புகார் கூறவே மாவட்ட எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் மோகன அய்யர் பெயர் பிரபலமானது. ரியல் சிங்கம் என்று அடைமொழி கொடுத்து ஊடகங்களில் செய்தி வெளியானது. சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்து விட்டனர் என்று கடந்த ஜனவரி 3ஆம் தேதி பாஜக சார்பில் பந்த் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த கேரள அரசுப் பேருந்தை தடுத்து சிலர் தாக்க முயன்றனர்.
டென்சனாக இருந்த அந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த களியக்காவிளை சப் இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் போராட்டக்காரர்களைப் பார்த்து சிங்கம் சூர்யா ஸ்டைலில் பேசினார். பஸ்ஸை தொட்டுப்பாருங்க என்று மோகன அய்யர் கூறியதை அடுத்து, கேரள பேருந்தை தாக்காமல் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. கேரள அரசும் பாராட்டி கவுரவித்தது.
மோகன அய்யர் மீது புகார்
களியக்காவிளையை அடுத்த சூரியகோடு பகுதியைச் சேர்ந்த சோமன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவர் தனது மனைவியை சப் இன்ஸ்பெக்டர் அபகரித்துக் கொண்டதாகவும், இருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தான் மனம் உடைந்து போயிருப்பதாகவும் அவர் பதிவிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. மாவட்ட எஸ்பி இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
நடந்தது என்ன?
வெளிநாட்டில் வேலை செய்து வரும் சோமன் ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த போது குடித்து விட்டு மனைவி குழந்தைகளை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இது குறித்து களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் சோமனையும் அவரமு மனைவியையும் அழைத்து விசாரித்தார்.
நடவடிக்கை எடுப்பேன்
சோமனிடம் அட்வைஸ் செய்த மோகன அய்யர், இனி அடிக்கக் கூடாது என்று எச்சரித்தாராம். குடித்து விட்டு மனைவி குழந்தைகளை அடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய சப் இன்ஸ்பெக்டர், அந்த பெண்ணிடமும் குடும்ப பிரச்சினை போலீஸ் ஸ்டேசன் வரை வரக்கூடாது அனுசரித்து செல்லுங்கள் என்று கூறினாராம். மீண்டும் அடித்தால் எனக்கு போன் செய்யுங்கள் என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.
வாட்ஸ் அப்பில் அவதூறு
இந்த சம்பவம் நடந்து சில நாட்களில் வெளிநாடு சென்ற சோமன், தன்னைப் பற்றி போலீசில் புகார் அளித்த மனைவியையும், தன்னை எச்சரித்த சப் இன்ஸ்பெக்டர் மோகன அய்யரையும் அசிங்கப்படுத்த நினைத்து அவதூறாக கள்ளத்தொடர்பு புகார் கூறி வீடியோ அனுப்பியுள்ளதாக கன்னியாகுமரி காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல போலீஸ் ஸ்டேசன்களில் பணிசெய்து நேர்மையான காவல்துறை அதிகாரி என்று பெயரெடுத்துள்ள மோகன அய்யர் மீது கள்ளத்தொடர்பு புகார் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.