மளமளவென கூடிய கூட்டம்.. வெளியே கூட வர முடியல.. குமரியில் திக்குமுக்காடிய போலீஸ் நிலையம்! என்னாச்சு
கன்னியாகுமரி: தனியார் நிலத்தில் வைத்திருந்த முள்வேலியை அகற்றிய நபரை விடுதலை செய்யக்கோரி 10 மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மீனவ சமுதாய மக்களின் கீழ் இயங்கும் தூத்தூர் புனித யூதா கல்லூரி உள்ளது.
இந்தக் கல்லூரிக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம் கல்லூரிக்கு பின்பக்கமாக உள்ளது.

முள்வேலி அமைத்த வழக்கு
இதனை உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தனி நபர் ஒருவர் போலீசார் அனுமதியுடன் அங்கு முள்வேலி வைத்தார். இதற்கு தூத்தூர் மண்டல மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 8 ஊர் பங்குத் தந்தையர்கள் சேர்ந்து முள் வேலியை பிடுங்கி எறிந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் முள்வேலி அகற்றியதை தலைமை ஏற்று நடத்தியதாக சின்னதுறை ஊரைசேர்ந்த ராஜூ என்பவரை கைது செய்தனர்.

8 ஊர் பங்கு தந்தையர்கள்
அதேபோல, 8 பங்கு தந்தையர்கள் மற்றும் ஊர்மக்கள் 50 பேர் மீதும் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜு என்பவரை விடுவிக்க வலியுறுத்தி காவல் நிலையம் முன்பாக 8 ஊர் பங்கு தந்தையர்கள் மற்றும் ஊர்மக்கள் நித்திரவிளை காவல் நிலையம் முன்பு திரண்டனர்.

வெளியே வர முடியாத அளவுக்கு
போலீசார் வெளியே வர முடியாத அளவுக்கு போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினரும், கல்லூரி மாணவர்களும் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு மேலும் தொற்றிக்கொண்டது. கைது செய்யப்பட்ட ராஜூவை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

500 பேர் மீது வழக்கு பதிவு
காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த போராட்டம் இரவு 7.30 மணி வரை நீடித்தது. சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்த போராட்டம் காரணமாக காவல் நிலைய வளாகம் பெரும் பதற்றமாகவும் காணப்பட்டது. போராட்டம் தீவிரம் அடைந்ததையடுத்து ராஜூவை காவல் நிலைய ஜாமீனில் போலீசார் விடுதலை செய்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக 500 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பரபரப்புடன் காணப்பட்டது
இந்த சம்பவத்தால் நித்திரைவிளை காவல் நிலையம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. போலீஸ்காரர்கள் கூட காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் சூழ்ந்துகொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications