மோசமான வெள்ள பாதிப்பு.. தொகுதி பக்கம் எட்டிப்பார்க்காத எம்எல்ஏ விஜயதாரணி.. கொந்தளிக்கும் பொதுமக்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் கடுமையான வெள்ளச் சேதம் ஏற்பட்ட நிலையில், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தொகுதியில் எவ்வித மீட்புப் பணிகளிலும் ஈடுபடவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது.
குறிப்பாகத் தலைநகர் சென்னையில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குமரியில் கனமழை
சென்னை இப்போது தான் நிலை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் அம்மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். அம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மோசமான பாதிப்பு
பல கிராமங்களில் இந்த வெள்ளத்தால் வீடுகள் இடியும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். சிலர் வீடுகளில் உள்ள உடைமைகளை விட்டுவிட்டு படகில் ஏற தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் மழையும் விட்டுவிட்டுப் பெய்து வருவதால் மீட்புப் பணிகளையும் முழு வீச்சில் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

முதல்வர்
இந்நிலையில், கன்னியாகுமிரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், இன்றைய தினம் குமரியில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்த முதல்வர் அவர்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்தார். அதேநேரம் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் மக்கள் தங்கள் சட்டசபை உறுப்பினர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொந்தளிக்கும் பொதுமக்கள்
விளவங்கோடு தொகுதியில் சட்டசபை உறுப்பினராக உள்ளவர் காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி, அதிதீவிர கனமழை பெய்து மிக மோசமான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் தங்கள் சட்டசபை உறுப்பினர் தொகுதி பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை எனப் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடுமையான வெள்ளச் சேதம் ஏற்பட்ட போதிலும் எவ்வித மீட்புப் பணிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஈடுபடாதது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முதல்வரே கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட போதிலும், எம்எல்ஏ வராதது என்ன மாதிரியான அணுகுமுறை என்றும் அவர்கள் விமர்சித்தனர்.












Click it and Unblock the Notifications