இந்த காலத்திலும் இப்படி... KGF படம் போல் கரூரில் கொத்தடிமையாக வைக்கப்பட்டு இருந்த 41 பேர் மீட்பு
கரூர்: தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 7 குடும்பங்களை சார்ந்த பெண்கள் மற்றும் கைக்குழந்தைகள் உட்பட 41 பேரை மீட்டு மாவட்ட அதிகாரிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
Recommended Video
கரூர் மாவட்டம் வாங்கலை அடுத்த எல்லைமேடு பகுதியில் கே.பி.கே பிரிக்ஸ் என்ற பெயரில் தனியார் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது.
இதில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 41 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருவதாகவும் வருவாய் கோட்டாட்சியருக்கு தேசிய ஆதிவாசிகள் ஆணையத்திலிருந்து புகார் கடிதம் வந்துள்ளது.

செங்கல் சூளையில் கொடுமை
கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு முறையான ஊதியம் மற்றும் விடுமுறை வழங்கப்படுவதில்லை என்றும் அவர்களை மீட்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் தலைமையில் வருவாய் துறை, தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் துரித நடவடிக்கையில் இறங்கினர்.

குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் மீட்பு
அவர்கள் இன்று காலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த தனியார் செங்கல் சூளைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்ததை போன்றே அங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம், விடுமுறை அளிக்கப்படாமல் இருப்பதும், போதிய குடியிருப்பு வசதிகள் செய்து கொடுக்காமல் இருப்பதும் தெரியவந்தது.

மலர்ந்தது விடுதலை
இதனை அடுத்து அங்கு கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு இருந்த ஆண்கள், பெண்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளை அதிகாரிகள் குழுவினர் மீட்டனர். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு தேவையான உணவுகளையும், தண்ணீரும் வழங்கப்பட்டன.

சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
அத்துடன் அவர்களுக்கு தொழிலாளர் நல அலுவலகம் சார்பில் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தலா ரூ.30 ஆயிரம் வழங்கி, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதனை தொடர்ந்து 7 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 41 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications