செந்தில் பாலாஜி அமைச்சராகிட்டார்.. வேண்டுதல் நிறைவேறிடுச்சு.. பெட்ரோல் ஊற்றி தீ குளித்த மாஜி அதிகாரி
கரூர்: கரூரில் உள்ள கோயில் ஒன்றில் ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக அதிகாரி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
திமுக ஆட்சி வரவேண்டும், செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டதாகவும், வேண்டுதல் நிறைவேறியதால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தீ வைத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் அருகே மண்மங்கலத்தில் உள்ளது காளியம்மன் திருக்கோயில். மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் குலதெய்வம் இந்த கோயில்.

திடீரென தீ வைத்த நபர்
இன்று காலை கோவிலுக்குள் வந்த நபரொருவர் தனது பையில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். எதிர்பாராமல் நபர் ஒருவர் தீ வைத்துக் கொண்டதை கண்ட கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிதறி ஓடினர். தீ முற்றிலும் பரவி அந்த நபர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

அருகில் கிடந்த கடிதம்
தீ வைத்துக் கொண்ட நபர் ஒரு அருகில் வாக்குமூல கடிதம் ஒன்று கிடந்துள்ளது. அந்த கடிதத்தில் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்றும்.. செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக வேண்டும் என்றும், ஏற்கனவே, தான் இந்த கோயில் வேண்டிக் கொண்டதாகவும், இப்போது அது நடந்துவிட்டது. வேண்டுதல் நிறைவேறியதால் தான் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தீக்குளித்தவர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் வளாகத்திற்குள் தற்கொலை செய்துகொண்ட நபர் லாலாபேட்டையைச் சேர்ந்த உலகநாதன் என்றும், இவர் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வாங்கல் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய பெண்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இதுபோல நடைபெறும் முதல் சம்பவம் இது கிடையாது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பொதுவக்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற தி.மு.க அனுதாபி மனைவி வனிதா, வேண்டுதலுக்காக நாக்கை அறுத்து காணிக்கையாக்கினார்.
தி.மு.க வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வந்தால், தன் நாக்கை வெட்டிக் காணிக்கை தருவதாக இவர் பரமக்குடி முத்தாலம்மனை வேண்டிக்கொண்டதால், நாக்கை வெட்டி காணிக்கையாக்கினார்.

ஸ்டாலின் வேண்டுகோள்
இதுபோன்ற செயல்பாடுகளை செய்யக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் அப்போதே கூறியிருந்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா என்கிற தி.மு.க. தொண்டர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் தன் நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்துவதாகக் கோயிலில் வேண்டிக்கொண்டதோடு அதை நிறைவேற்றியதாகவும் செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்.

ஸ்டாலின் அறிக்கை
தமிழக மக்கள் ஒரு துளி ரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம். நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகச் சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீர்கள்.

புன்னகையில் அரசின் வெற்றி
அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் இதைப் போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திட கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது. வனிதா என்ற சகோதரி விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications