கரூர் கோயிலில் குறி சொல்லும் சக்திவேல்.. திருச்சி பெண்ணால் கிடைத்த பல லட்சம்.. என்ன நடந்தது?
கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் உள்ள ஒரு கருப்பசாமி கோயிலில் சக்திவேல் என்பவர் பொது மக்களுக்கு குறி சொல்லி வேண்டுதல்களை நிறைவேற்றி தருவதாக கூறி வந்துள்ளார். இதனை நம்பி பலரும் சென்று வந்துள்ளனர். அப்படித்தான் திருச்சியைச் சேர்ந்த பிரவீனா என்ற பெண், குறி கேட்க வந்துள்ளார். பிரவீனாவுக்கு அடிக்கடி உடல் பாதிப்பு ஏற்பட்டு வந்ததாம். அந்த பிரச்சனையை தீர்க்க பூஜை செய்வதாக நம்ப வைத்து 5.50 லட்சம் பணத்தை சக்திவேல் பறித்தாராம். அவரை போலீசார் கைது செய்தனர்.
குறி சொல்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று ஒவ்வொரு கோயில்களிலும் பக்தர்கள் பார்க்கிறார்கள். இதை பயன்படுத்திக் கொள்ளும் சில போலி சாமியார்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயலுகிறார்கள்.அதேபோல் மக்களை ஏமாற்றி, தான் தான் கடவுள் என்று நம்பவைக்கும் வேலைகளையும் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் செல்வாக்குள்ள தலைவர்களாக உருவெடுக்கிறார்கள்.. அதேநேரம் மக்களை ஏமாற்றும் நபர்கள், சில நேரங்களில் சிக்கி கொள்வதும் உண்டு. அப்படித்தான் ஒரு போலி சாமியார் கரூரில் சிக்கியுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தெப்பக்குளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு தெருவில் கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடவூர் தாலுகா, கரிச்சிப்பட்டியைச் சேர்ந்த 38 வயதாகும் சக்திவேல் என்பவர் தங்கியுள்ளார். இவர் கோயிலுக்கு வரும் பொது மக்களுக்கு குறி சொல்லி வருகிறார். கடவுளிடம் கேட்டு வேண்டுதல்களை நிறைவேற்றி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், பெரியார் தெருவைச் சேர்ந்த 26 வயதாகும் பிரவீனா என்பவருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை... பிரவீனா தனது தாயாருடன் வசித்து வருகிறார். பிரவீனாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. பல மருத்துவமனைகளில் சென்றும் பார்த்த போதும் எந்த பயனும் இல்லையாம்.
தீராத நோயெல்லாம் தீர்த்து வைப்பார் என்று சிலர் கரூர் குளித்தலை சாமியார் குறித்து கூறியுள்ளார். இதை கேள்விப்பட்ட பிரவீனா குளித்தலையில் இருந்து குறி சொல்லும் சாமியார் சக்திவேலிடம் சென்று முறையிட்டாராம். குறிகேட்ட பிரவீனா மற்றும் அவரது தாயார் செல்வராணி இருவரும் அங்கு சென்றுள்ளார்களாம்.
அங்கு சென்று பார்த்த பொழுது பிரவீனாருக்கு பேய் பிடித்துள்ளதாகவும், பிரவீனா வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதை சரி செய்வது தருவதாகவும் கூறி ரூபாய் 10 லட்சம் கேட்டாராம். மேலும், அவர் சம்மதம் தெரிவித்து இந்த 2024 டிசம்பர் மாதத்தில் இருந்து கோயிலுக்கு வந்து சென்றுள்ளார். அதோடு, சுமார் பத்து முறை பணம் ஜிபே மற்றும் நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமாகவும் ரூ.5,50,000 கொடுத்துள்ளார். அதன் பிறகு சக்திவேல் மூன்று முறை சென்று வீட்டில் மாந்திரீகம் செய்வதாகவும், அதன் பின்னர் சரி ஆகிவிடும் என்று கூறினாராம்.
ஆனால், பிரவீனாவிற்கு உடல்நிலை சரியாகாததால் தனியார் மருத்துவமனை சென்று உடல்நிலையை சரிசெய்துள்ளார். அதன் பின்னர், பிரவீனா தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு சாமியார் சக்திவேல் தகாத வார்த்தையில் திட்டியும், கையால் அடித்தும், உங்களை கருப்புசாமிக்கு வெட்டி பலிக்கடா ஆக்கி கொன்று விடுவேன்' என்றும் மிரட்டினாராம்.
இது குறித்து பிரவீனா கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் சக்திவேலை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணிடம் போலி சாமியார் ஒருவர் பணம் பெற்று மோசடி செய்து கைதான சம்பவம் குளித்தலை பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications