ஆடி அமாவாசை: கொரோனா பயமே இல்லாமல் தடையை மீறி வைகை, காவிரி ஆறுகளின் படித்துறைகளில் குவிந்த மக்கள்
மதுரை/ கரூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு தடையை மீறி வைகை மற்றும் காவிரி ஆறுகளின் படித்துறைகளில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளை செய்தனர். கொரோனா பாதிப்பு நீடிக்கும் நிலையிலும் பொதுமக்கள் அது குறித்த அச்சமே இல்லாமல் பெரும் எண்ணிக்கையில் திரண்டது நோய் தொற்று பரவலை அதிகரிக்கக் கூடும் என்கிற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடருவதால் பல கட்டுப்பாடுகளுடன் 2 வார காலத்துக்கு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவிடக்கூடாது என்று கோவில்களில் சாமி தரிசனத்திற்கும், நீர் நிலைகளிலும் கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆடி அமாவாசை நாட்களில் பாபநாசம் கோவில் பகுதியிலும் தாமிரபரணி படித்துறையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பாபநாசத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு எள்ளும், நீரும் இறைத்து தர்ப்பணம் செய்வர். பாபநாசம் தாமிரபரணி நதிக்கரையில் இந்த தர்ப்பணம் செய்வதால் பாவங்கள் நீங்கி மோட்சம் பிறக்கும் என்பதும் நம்பிக்கை. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் வருகிற 9-ந் தேதி வரை பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடுவதற்கும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் இன்று பாபநாசம் படித்துறை வெறிச்சோடியது. பாபநாசம் கோவில் முன்பாக விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, ஆற்றுப்படித்துறைக்கு பொதுமக்கள் செல்ல முடியாத வண்ணம் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
சுதந்திர போராட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை.. சிலர் தவறாகவும் பயன்படுத்துகின்றனர்.. ஐகோர்ட் வேதனை
வெறிச்சோடிய கன்னியாகுமரி
16 தீர்த்தங்களைக் கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களை நினைத்து பச்சரிசி பூ, தர்ப்பை ஆகிய பூஜை பொருட்களைக் கொண்டு வேத விற்பனர்களை வைத்து பூஜைகள் செய்து புனித நீராடுவது இந்துக்களின் மரபு ஆனால் கன்னியாகுமரியில் கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளின் காரணமாக பக்தர்களுக்கு புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நேற்று முதலே கன்னியாகுமரி கடல் பகுதி கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. கன்னியாகுமரிக்கு நுழையும் வாயில் அனைத்தையும் தடுப்பு வேலிகள் வைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவசை நாட்களில் காலையில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் கன்னியாகுமரியில் பக்தர்கள் அனுமதி மறுக்கப்படாததால் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. அதையும் மீறி வரும் ஒருசிலரை போலீசார் அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பினர்.
சதுரகிரியில் தடை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்கு ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். இக்கோவில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. திருக்கோவில் அமைந்துள்ள பகுதி மதுரை மாவட்டத்திலும் மலை ஏறும் அடிவாரப் பகுதியானது தாணிப்பாறை பகுதி விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக 2015 ஆம் ஆண்டு முதல் அமாவாசை. பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் மோசமான வானிலை காரணமாகவும் இந்நாட்களில் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவதில்லை. தற்போது கொரோனா பரவல் இருப்பதால் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும் ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 6, 7 ,8 ,9 ஆகிய நான்கு நாட்களுக்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் பக்தர்கள் மலை ஏற அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகையால் இந்த நான்கு நாட்களிலும் யாரும் தாணிப்பாறை அடிவாரம் பகுதிக்கு வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம், திருக்கோவில் நிர்வாகம், காவல் துறையினர் என மூவரும் சேர்ந்து இந்த அறிவிப்பை அறிவித்தனர். இதனால் கோயில் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் தரிசனத்திற்க்க வரும் பக்தர்களை 200க்கு மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கோயில் நுழைவாயிலில் வைத்து திருப்பி அனுப்புகின்றனர்.
வைகையில் குவிந்த பொதுமக்கள்
ஆனால் ஆடி அமாவாசை தினமான இன்று மதுரை, நிலக்கோட்டை அணைப்பட்டி வைகை ஆற்றங்கரையில் தர்ப்பணம் தர்ப்பணம் செய்வதற்காக பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடினர், சமூக இடைவெளியும், முக கவசமும் இல்லாமல் அமர்ந்து ஆங்காங்கே தங்களது முன்னோர்களுக்கு அவர்கள் தர்ப்பணம் செய்து வைகை ஆற்றில் பொருட்களை கரைத்து சென்றனர்.
காவிரி கரையில் மக்கள் வெள்ளம்
இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களைத் திறக்கவும், பொதுமக்கள் வழிபாடு செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றுப் படுகையில் புனித நீராடவும், முதியோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று கரூரை அடுத்த நெரூர் காவிரி ஆற்றுப் பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் கூடி புனித நீராடினர். மேலும் புரோகிதர்கள் மூலம் தர்ப்பணம் கொடுத்தனர். பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தர்ப்பணம் கொடுத்தனர். அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது இவற்றை தடுக்கும் நோக்கில் அப்பகுதியில் போலீசாரோ, வருவாய் துறை அதிகாரிகளோ செயல்படவில்லை. வாங்கல் பகுதியில் காவல்துறையினர் பெயரளவில் பேனர் மட்டுமே வைத்துள்ளனர். ஆனால் வேறு எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.