"டாப் ஸ்டார்" விஜய்யை காண 10000 பேர் மட்டுமே வருவார்கள் என கணித்ததே தவறு! தவெகவுக்கு நீதிபதி கண்டனம்
கரூர்: கரூரில் 41 அப்பாவி மக்கள் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது "விஜய்யை பார்க்க வெறும் 10 ஆயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என்று நீங்கள் எப்படி சொன்னீர்கள், மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை என்றும் தவெக தரப்புக்கு நீதிபதி பரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அதிக கூட்டம் வரும் என விஜய்க்கு சொல்லப்பட்டதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் இன்று மருத்துவமனையில் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டு அவர்கள் கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, அவர்களிடம் நீதிபதி, "போலீஸார் உங்களை அடித்தார்களா" என கேட்டார். அதற்கு மதியழகனும் பவுன்ராஜும் இல்லை என்றனர். இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் தண்டபாணி தனது வாதத்தில், "கரூரில் போலீஸ் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியது. ஆனால் தவெக நிர்வாகிகள் அதை பின்பற்றவில்லை.
கரூர் சம்பவத்தில் சிகிச்சை பெற்று வருவோரில் மேலும் சிலர் இறக்க நேரிடும் என்பதால் மேலும் சிலரை கைது செய்ய வேண்டியுள்ளது" என தெரிவித்தார்.
அப்போது தவெக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை நியமித்துள்ளது. அந்த ஆணையத்தின் விசாரணை வரும் வரை யாரையும் கைது செய்யக் கூடாது.
விஜய் பரப்புரைக்கு அங்கு வந்தவர்கள் எல்லாம் தானாக வந்த கூட்டம்தான். யாரையும் வண்டி வைத்து அழைத்துவரவில்லை. விஜய் பரப்புரைக்கு பேருந்து நிலைய ரவுண்டானா பகுதி, லைட் ஹவுஸ் பகுதி, உழவர் சந்தை பகுதியை கேட்டிருந்தோம்.
ஆனால் போலீஸாரோ அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அதாவது லைட் ஹவுஸ் பகுதியில் பேசிவிட்டு உழவர் சந்தை வழியாக சென்றால் அங்கு 60 ஆயிரம் பேர் முதல் 1 லட்சம் பேர் வரை இருந்தாலும் அந்த கூட்டம் எளிதாக கலைந்து சென்றிருக்கும்.
ஆனால் போலீஸார் எங்களுக்கு அனுமதி வழங்காமல் வேலுசாமிபுரத்தைத்தான் தந்தார்கள். முதலில் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்றுதான் அனுமதி கேட்டோம்" என தவெக தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, விஜய்யை பார்க்க வெறும் 10 ஆயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என எப்படி கணக்கிட்டீர்கள்? மைதானம் போன்ற இடத்தை ஏன் நீங்கள் கேட்கவில்லை. நீங்கள் கேட்ட 3 இடங்களுமே போதுமான இடம் இல்லை. காலாண்டு விடுமுறை, வார விடுமுறை எனும் போது விஜய்யை பார்க்க குறைந்த அளவு கூட்டம் வரும் என எப்படி கணக்கிட்டீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications