கரூரில் துணை மேயர் தாரணி வீட்டுக்கு சீல்.. இரவில் ஐடி அதிகாரிகளை சிறை பிடித்த திமுகவினர்.. பரபரப்பு
கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். கரூரில் பெரும் களேபரம் நடந்த நிலையில் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு இரவில் அதிகாரிகள் சீல்வைத்தனர். இதையடுத்து அதிகாரிகளை திமுகவினர் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் தான் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மொத்தம் 40க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக செந்தில் பாலாஜியின் தம்பி அசோக், அவரது உறவினர்கள், நண்பர்கள், அரசு ஒப்பந்தாரர்களின் வீடுகளில் நுழைந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

11 மணிநேர சோதனை.. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் ஐடி ரெய்டு நிறைவு.. சிக்கியது என்ன? இந்த சோதனையின்போது கரூரில் களேபரமே நடந்து முடிந்தது. கரூரில் சோதனை நடத்த சென்ற அதிகாரிகளை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும், திமுகவினரும் சிறை பிடித்தனர். கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டுக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கார் கண்ணாடிகளை உடைத்து அராஜகம் செய்தனர். இதில் காயத்ரி உள்பட 4 வருமான வரித் துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.
மேலும் கரூரில் சில இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். ஐடி கார்டை கேட்டதோடு, அவர்களை சுற்றி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிய அளவில் பரபரப்பபை ஏற்படுத்தியது. இதனால் 9 இடங்களில் வருமான வரி சோதனை தடைப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அதன்பிறகு போலீஸ் பாதுகாப்புடன் வருமான வரி அதிகாரிகள் 9 இடங்களிலும் சோதனையை தொடர்ந்தனர்.
இந்நிலையில் தான் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட ராயனூரில் சோதனைக்கு சென்றனர். அங்கு அமைந்துள்ள கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு 4 காரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று சீல் வைத்ததோடு, கதவில் நோட்டீசும் ஒட்டினர். நேற்று காலையில் சோதனை நடத்த அதிகாரிகள் அனுமதிக்கப்படாத நிலையில் இரவில் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் வீட்டுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த திமுகவினர் உடனடியாக அங்கு குவிந்தனர். அப்போது வீட்டுக்கு சீல் வைத்தது ஏன்? நோட்டீஸ் ஒட்டியது ஏன்? என கேள்வி எழுப்பினர். இதற்கு அதிகாரிகள் பதிலளிக்காமல் இருந்த நிலையில் ஆக்ரோஷமடைந்த திமுகவினர் காரில் வந்த அதிகாரிகளை சிறைபிடித்தனர். அவர்களின் கார்களை மறித்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் மாட்டு வண்டி மற்றும் மாடுகளை சாலையில் கொண்டு வந்து நிறுத்தினர். இதனால் அங்கு இரவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவம் ஒரு புறம் இருக்க கரூரில் நேற்று இரவிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications