கரூர் மாவட்ட அரசியலில் களேபரம்.. ‘6:6’.. யாருக்கு பதவி? திடீரென இறங்கிய போலீஸ்.. பறந்து சென்ற மாஜி!
கரூர் : கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில், திமுக வெற்றி பெறுவதற்காக அதிமுக கவுன்சிலரை கைது செய்ய முயல்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரில், மாவட்ட ஊராட்சியில் அதிமுகவுக்கு அதிக பலம் இருந்து வந்த நிலையில், தற்போது சரிசமம் என்ற நிலைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று, அதிமுக மாவட்ட கவுன்சிலரை போலீசார் கைது செய்ய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாவட்ட கவுன்சில் துணைத் தலைவர் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவதற்காகவே, அதிமுக கவுன்சிலரை கைது செய்ய முயல்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், அதிமுக கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
டாஸ்மாக் கடை ஊழியர்களின் காலில் விழுந்து கெஞ்சிய பாமக எம்.எல்.ஏ.. தூக்கிவிட்ட பெண்கள்.. என்னாச்சு?
கரூர் மாவட்ட ஊராட்சி
கரூர் மாவட்ட ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக கூட்டணி 9 இடங்களிலும், திமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் 4-வது வார்டு அதிமுக உறுப்பினரான எம்.எஸ்.கண்ணதாசன் மாவட்ட ஊராட்சி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முத்துக்குமார் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரியிடம் தோல்வியடைந்தார்.
திமுக பலம் அதிகரிப்பு
முத்துக்குமார் ராஜினாமா செய்த வார்டில் நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கண்ணையன் வெற்றி பெற்றார். இதனால் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் திமுகவின் பலம் 4 ஆக அதிகரித்தது. அதிமுகவின் பலம் 8 ஆக குறைந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் நடைபெற இருந்தது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலில் ஆளுங்கட்சியான திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லாத சூழல் நிலவியது. இதனால், தேர்தல் அப்போது ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பல முறை ஒத்திவைப்பு
இதையடுத்து பலமுறை கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடத்த திட்டமிட்டும், பல்வேறு காரணங்களை கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே அதிமுகவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர். இதனால் தற்போது இரண்டு கட்சிகளின் பலமும் 6 - 6 என்ற அளவில் சமமாக உள்ளது. இந்நிலையில் இன்று மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
திமுக சூழ்ச்சி
இந்நிலையில் இன்றைய தேர்தலில் திமுக வெற்றி பெற அதிமுக உறுப்பினர்களை, வரவிடாமல் தடுக்க சூழ்ச்சி செய்வதாக அதிமுக தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கரூர் அதிமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் சிவானந்தத்தை போலீசார் நேற்று கைது செய்ய முயற்சித்தனர். ஓராண்டுக்கு முன்னர் சிவானந்தத்தின் உறவினர் பெண்மணி ஒருவர் சிவானந்தத்தின் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக மாயனூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்திருந்தனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் கூறி நேற்று 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் ஏராளமான போலீசார் சிவானந்தத்தின் பெட்ரோல் பங்கிற்கு சென்றனர்.
முன்னாள் அமைச்சர்
மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தன்னை போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர் எனக் கூறி சம்மனை வாங்க மறுத்தார் சிவானந்தம். இதுபற்றி தகவலறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுகவினர் அங்கு குவிந்த்தால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிமுக மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களை மிரட்டி பணிய வைக்க முயல்கின்றனர் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.
கவுன்சிலர்களுடன் சென்று புகார்
இதையடுத்து, 6 அதிமுக உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார். அதிமுக உறுப்பினர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்தார். மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை சந்தித்து, நியாயமாக தேர்தல் நடக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தார்.
பொய் வழக்கு
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், "கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் திமுகவிற்கு 6 உறுப்பினர்கள், அதிமுகவிற்கு 6 உறுப்பினர்கள் என சம பலத்தில் உள்ளனர். இந்நிலையில் அதிமுக மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களை மிரட்டி பணிய வைக்க முயல்கின்றனர். 2 நாட்களுக்கு முன்னர் வசந்தா என்ற அதிமுக கவுன்சிலரின் கணவர் பழனிசாமியை பொய் வழக்கில் கைது செய்துள்ளனர். இப்போது, மற்றொரு அதிமுக ஊராட்சி உறுப்பினரரான சிவானந்தத்தை கைது செய்ய முயற்சி செய்கின்றனர்.
குலுக்கல் முறையில்
ஏற்கனவே பல ஒன்றிய சேர்மன்களை மிரட்டி தங்கள் வசம் இழுத்துவிட்டது திமுக. கரூர் மாவட்டத்தில் திமுக அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. அதிகார போதையில் அளவுக்கு மீறி ஆடிக்கொண்டிருக்கிறார்கள். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் மோசடியாக ஏதேனும் திட்டமிட்டு செயலாற்றினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அவர்கள் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுப்போம்" என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.