ஆபத்தான சிந்தனை.. தொடரும் கொடூரம்..மாணவிக்கு 14 முறை கத்தி குத்து - ஜோதிமணி எம்.பி. வேதனை
கரூர்: மணப்பாறையில் காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவியை 14 முறை கத்தியால் குத்திய சம்பவம் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனேன். அந்த மண்ணில் இப்படி ஒரு கொடுமையா என்று வேதனையாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் ஜோதிமணி எம்பி. ஒரு பெண் சுய சிந்தனை சுய விருப்பற்ற ஆணின் விருப்பத்தை கட்டாயமாக ஏற்க வேண்டியவள் வெறும் உடல் என்கிற ஆபத்தான சிந்தனையில் இருந்து இம்மாதிரியான கொடூரங்கள் உருவாகின்றன என்றும் அவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை அத்திகுளம். இப்பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். நேற்று கடைசி தேர்வு முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றிருக்கிறார்.
அப்போது அவரை வழிமறித்த இளைஞர் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி இருக்கிறார். அவரின் காதலை ஏற்க மறுத்ததால் அந்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி இருக்கிறார்.

மாணவிக்கு சிகிச்சை
ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து கிடந்த மாணவியை அந்தப் பகுதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை உடனே பிடிக்க வேண்டும் என்று ஜோதிமணி எம்பி கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஜோதிமணி எம்.பி
இது குறித்து ஜோதிமணி, "மணப்பாறையில் காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவி 14 முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனேன். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசி இருக்கிறேன் . குற்றவாளியை பிடிக்க மூன்று அடிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவர் கதிரேசனிடம் பேசினேன் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

வேதனை
மேலும் அவர் தனது பதிவில் ஒவ்வொரு முறையும் இப்படிப்பட்ட கொடூரங்கள் நடக்கும் போது வேதனை அடைகின்றோம் . பின்னர் கடந்து போய் விடுகின்றோம் . ஒரு பெண் சுய சிந்தனை சுய விருப்பற்ற ஆணின் விருப்பத்தை கட்டாயமாக ஏற்க வேண்டியவள் வெறும் உடல் என்கிற ஆபத்தான சிந்தனையில் இருந்து இம்மாதிரியான கொடூரங்கள் உருவாகின்றன என்று கூறியிருக்கிறார் ஜோதிமணி,

அந்த மண்ணில் இப்படியா?
சமூகத்தில் புரையோடிப் போய் இருக்கின்ற இந்த ஆபத்தான மனநிலையை மாற்ற ஆரம்பக் கல்வி பாடத்திட்டங்களிலும் கற்பிக்கின்ற முறையிலும் மாற்றம் வேண்டும் கடுமையான சட்டங்களும் தண்டனையும் அவசியம் வேண்டும். நமது குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்று தெரிவித்திருக்கிறார். மணப்பாறை மக்கள் அன்பிற்கும் எளிமைக்கும் அமைதிக்கும் பெயர் போனவர்கள் அந்த மண்ணில் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்திருப்பது வேதனையை அளிக்கிறது என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

ரயில் தண்டவாளத்தில் சடலம்
இதனிடையே மாணவியை கத்தியால் குத்தியவர் பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த கேசவன் என்பதும், ஏற்கனவே மாணவியை கடத்திச் சென்றது தொடர்பான வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதும் தெரியவந்தது. இதையடுத்து தப்பி சென்ற இளைஞரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கீழ பூசரிப்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடைப்பதாக கிடைத்த தகவலின்பேரில் திருச்சி ரயில்வே போலீசார் மற்றும் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது உயிரிழந்தவர் கேசவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications