நுபுர்சர்மாவை கைது செய்யுங்க! அதிகாரத்துக்காக வகுப்புவாதத்தை தூண்டும் பாஜக! தமிமுன் அன்சாரி விளாசல்
கிருஷ்ணகிரி: பாஜக அடிப்படை வசதிகள் பற்றி பேசாமல் வகுப்புவாதத்தை ஊக்குவித்து அரசியல் அதிகாரத்தை தக்க வைக்கிறது. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நுபுர் சர்மா, ஜிண்டாலை கைது செய்ய வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கூறினார்.
பாஜக கட்சியின் நிர்வாகிகளாக இருந்த நுபுர் சர்மா, ஜிண்டால் ஆகியோர் இஸ்லாமிய நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து இருவர் மீதும் பாஜக நடவடிக்கை எடுத்தது. நுபுர் சர்மா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் ஜிண்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

கைது செய்யக்கோரி போராட்டம்
நுபுர் சர்மா, ஜிண்டால் மீது இந்தியாவின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.விசாரணைக்கு ஆஜராகும்படி நுபுர்சர்மாவுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நுபுர் சர்மா மற்றும் ஜிண்டாலை கைது செய்ய வேண்டும் என முஸ்லிம் மக்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி காமராஜ் காலனியில் நபிகள் சர்ச்சைக்குறிய வகையில் பேசியவர்களை கைது செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் முன்னாள் எம்எல்ஏவும், மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார். அதன்பிறகு அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கைது செய்ய வலியுறுத்தல்
இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து அவதுறாக பேசிய நுபுர் சர்மா, ஜிண்டால் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். நாடு முழுவதும் ஜனநாயக சக்திகள் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. யாராக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும் அவதூறாக பேசுவோரை எச்சரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வகுப்புவாதத்தை ஊக்குவிக்கும் பாஜக
பாஜக அடிப்படை வசதிகள் குறித்து பேசாமல் வகுப்புவாதத்தை ஊக்குவித்து அரசியல் அதிகாரத்தை தக்க வைத்து வருகிறது. 2 லட்சம் வேலைவாய்ப்புக்களை ஏற்பபடுத்துவேன் எனக்கூறியவர்கள் அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் செயல்படுகின்றனர். இதனால் நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது'' என்றார்.

அதிமுக விவகாரம் கவலையளிக்கிறது
அதிமுக விவகாரம் குறித்து கேட்டதற்கு, ‛‛கழகங்கள் இல்லாத தமிழகம். கவலையில்லாத தமிழகம் என்று பாஜகவினர் பேசி வருகின்றனர். இது கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஆனால் ஒருகட்சி விவகாரத்தை மற்றொரு கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சிக்ககூடாது'' என்றார்.












Click it and Unblock the Notifications