வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா! பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்த திமுக வேட்பாளர்!
கிருஷ்ணகிரி: வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா செய்துவிடுவதாக 100 ரூபாய் பத்திரத்தாளில் கையெழுத்திட்டு கொடுத்து, வாக்கு சேகரித்து வருகிறார் திமுக வேட்பாளர் மாதேஷ்வரன்.
ஒசூர் மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் இவர், திமுக அங்கு அதிக இடங்களை வெல்லும்பட்சத்தில் மேயர் பதவிக்கான போட்டியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவில் முட்டி மோதும் 3 வி.ஐ.பி.க்கள்! யாருக்கு சிம்மாசனம்? பரபரக்கும் கோவை மேயர் ரேஸ்!
ஒசூர் நகராட்சியாக இருந்தபோது ஏற்கனவே நகர்மன்ற தலைவராக இருந்தவர் மாதேஷ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சித் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு நாட்கள் நெருங்க நெருங்க வேட்பாளர்களின் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வாக்குறுதிகளால் வாக்காளர்களை வளைத்து வருகின்றனர். உசிலம்பட்டியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக பெண் வேட்பாளர் ஒருவர், விசேஷ வீட்டுக்கு திருமண மண்டபமும், துக்க வீட்டுக்கு ஐஸ் பெட்டியும் இலவசமாக கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து கவனம் ஈர்த்திருந்தார்.
22-வது வார்டு
அவரைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், வார்டு மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்து அசத்தியிருக்கிறார். அந்த வரிசையில் ஒசூர் மாநகராட்சி 22-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் மாதேஷ்வரன், 100 ரூபாய் பத்திரத்தாளில் 12 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறி கையெழுத்திட்டுள்ளதுடன் அதனை நிறைவேற்றத் தவறினால் ராஜினாமா செய்வேன் எனத் தெரிவித்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
சட்டப்பூர்வ நடவடிக்கை
வாக்குறுதிகளை தன்னால் நிறைவேற்ற முடியாத பட்சத்தில் தன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என்ற அனுமதியையும் அந்த பத்திரத்தில் உறுதியாக கொடுத்திருக்கிறார் மாதேஷ்வரன். ஒசூரை பொறுத்தவரை இதுவரை நகராட்சியாக மட்டுமே தேர்தலை சந்தித்து வந்த நிலையில், முதல்முறையாக மாநகராட்சியாக தேர்தலை சந்திக்கிறது. இதனால் ஒசூர் மேயர் பதவியை கைப்பற்ற திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு களமாடுகின்றன.
வரி குறைப்பு
வீட்டுவரி, குடிநீர் வரியை குறைக்க நடவடிக்கை, மாதம் ஒரு நாள் குறைதீர்க்கும் கூட்டம், முன் மாதிரி வார்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் கிடைக்க நடவடிக்கை என 12 வகையான உறுதிமொழிகளை திமுக வேட்பாளர் மாதேஷ்வரன் கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.