கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு "கொடியன்குளம்.." ஒடுக்குமுறையால் பதறும் பாஞ்சாலி நகர்!
கிருஷ்ணகிரி: தூத்துக்குடி மாவட்டம், கொடியன்குளம் ஊரில், ஒடுக்கப்பட்ட ஜாதியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை போலவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாஞ்சாலி நகரில் அடக்குமுறை அரங்கேறியுள்ளது பதற வைக்கிறது.
Recommended Video
1995ம் ஆண்டு, கொடியன்குளத்தில், ஒடுக்கப்பட்ட ஜாதியினர் பொருளாதார ரீதியாக முன்னேறியதை பிடிக்காத ஆதிக்க ஜாதியினர், காவல்துறையிலிருந்த தங்கள் ஜாதியினர் துணையோடு ஒடுக்குமுறையில் ஈடுபட்டதும், அதை தட்டிக் கேட்டபோது, போலீசார், ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததும் வரலாற்று துயரமாக தொக்கி நிற்கிறது.
இந்த சம்பவத்தை தழுவிதான், சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் "கர்ணன்" திரைப்படம் வெளியானது.
"இப்போதெல்லாம், யார் சார் ஜாதி பார்க்கிறார்கள்.. அதெல்லாம் பழைய கதை. இதை படமாக ஏன் எடுக்க வேண்டும்" என்ற குரல்கள் ஒரு பக்கம் எழுந்த நிலையில், "இப்போதும் அப்படித்தான்" என்ற கசப்பான உண்மையை நெற்றிப் பொட்டில் அடித்துச் சொல்கிறது, இந்த பாஞ்சாலி நகர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை காவல் சரகத்தின் எல்லைக்குள் வருகிறது இந்த ஊர். இங்கு மொத்தம் சுமார் 120 தமிழ் குறவர் ஜாதியைச் சேர்ந்த குடும்பங்கள் வசிக்கிறார்கள். மளிகை கடை நடத்துவது உள்ளிட்ட தொழில்கள் மூலம், படிப்படியாக இந்த சமூகம் பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது.
பாஞ்சாலி நகரின் பக்கத்து ஊர்களில் கணிசமாக வசிக்கும் ஒரு ஜாதியினருக்கு, இந்த வளர்ச்சி கண்களை உறுத்துகிறதாம். கர்நாடகா, ஆந்திராவில் பரவலாக உள்ள ஓரளவு முன்னேறிய ஒரு ஜாதி பிரிவை சேர்ந்த அவர்கள், பாஞ்சாலி நகர் ஊருக்குச் சென்று, வம்பு இழுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.
சம்பவத்தன்றும், அப்படித்தான், அங்கே, மளிகைக் கடை வைத்துள்ள பெண் ஒருவரை அணுகி, பீடி வேண்டும் என்று பக்கத்து ஊர் இளைஞர்கள் சிலர் கேட்டுள்ளனர். ஆனால் ஊரடங்கு நேரத்தில் கடையை திறக்க முடியாது, அப்படிச் செய்தால், போலீசார் அபராதம் போடுவார்கள் என எடுத்துக் கூறியுள்ளார் அந்த பெண். இதனால் கோபமடைந்த அந்த வாலிபர்கள், நடு ரோட்டில், பெண்ணை தாக்கியதோடு, அவர் சேலையை இழுக்க முயன்றுள்ளனர்.
இப்படிச் செய்யலாமா என கேட்க வந்த அந்த பெண்ணின் உறவுக்கார பெரியவரை செங்கல்லால் தலையில் ஓங்கியடித்து ரத்தம் வரும் அளவுக்கு இளைஞர்கள் அட்டகாசம் செய்தனர். இவை அனைத்தும் அப்பகுதியைச் சேர்ந்த சிலரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு பதற வைக்கும் அளவுக்கு காட்சிகள் உள்ளன.
தாக்குதல் நடத்திய இளைஞர்கள் மீது போலீசில் பாஞ்சாலி நகர் மக்களில் சிலர் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மேலும் தைரியமடைந்த இளைஞர்கள், இரவு சுமார் 25 பேர் கொண்ட கும்பலோடு வந்து, பாஞ்சாலி நகர் பகுதியிலுள்ள வீடுகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்களும், குழந்தைகளும் செய்வதறியாது அச்சத்தால் அழுது புரண்டுள்ளனர்.
இதுகுறித்து, ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதிலும், பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளதாகவும், தாக்கியவர்களில் 2 பேர் மீது வழக்கு போட்டுள்ளதாகவும் குமுறுகிறார்கள் பாஞ்சாலிநகர் மக்கள்.
தமிழர் சுயமரியாதையை மீட்டெடுத்து, உரிமைகளை கொண்டு சேர்க்க பாடுபடும், "மீண்டெழும் தமிழர்கள்" என்ற இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் துரியோதனன், இதுகுறித்து கூறுகையில், பாஞ்சாலி நகர் பகுதியில் வாழ்பவர்கள், பூர்வீக தமிழ்க் குடிகள். வேட்டுவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பல்வேறு ஜாதிகளும் வேட்டுவர் சமூகத்திலிருந்து பிரிந்தவைதான். சிலப்பதிகாரம் உட்பட பல இலக்கியங்களில், குறிப்பிடப்பட்ட குடியைச் சேர்ந்தவர்கள். அப்படியான பூர்வீக தமிழ் குடிகளை, பிற மாநில ஜாதியைச் சேர்ந்தவர்கள், சொந்த, தமிழ் மண்ணில் ஒடுக்க முயற்சிக்கிறார்கள். பல முறை இதுபோல தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் புகாரின்பேரில், இதுவரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் புகாரை பதிவு செய்யவேயில்லை. உடனடியாக காவல்துறை இந்த சட்டத்தின்கீழ், வழக்குப் பதிவு செய்ய வேண்டும், புகாரை ஏற்க மறுத்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்காத, காவல்துறையினர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இரு பிரிவினரிடையே தற்காலிகமாக சமாதானம் செய்து வைக்க பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு நெருக்கடி தருவதை காவல்துறை நிறுத்த வேண்டும், பழங்குடியின பிரிவைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞரை தாக்குதல் நடத்தியவர்களோடு சேர்த்துள்ளனர். இதன்மூலம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்துவதை தவிர்க்க திட்டம் போடப்பட்டுள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என்றார் ஆதங்கத்தோடு.