உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு.. 4 வயது மகனை கொன்று புதைத்த இளம்பெண்.. நீதிமன்றம் கொடுத்த 'நச்' தண்டனை
கிருஷ்ணகிரி : கள்ளக்காதலனுடன் சேர்ந்த 4 வயது மகனை கொன்று புதைத்த இளம்பெண்ணுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ராணுவ வீரர் சிவானந்தம். இவரது மனைவி வனிதா (வயது 29). இவர்களுககு நந்தீஸ்குமார் (4) என்ற குழந்தை இருந்தான்.
வனிதாவுக்கும், இளையான்குடியை சேர்ந்த கார் டிரைவரான கார்த்திக்ராஜா என்கிற சிவகார்த்திக் (28) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிறுவனுடன் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று, தனியாக வீடு வாடகை எடுத்து வசித்து வந்தார்கள்.
இந்த நிலையில் இந்த கள்ளக்காதல் ஜோடியின் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததாக நந்தீஸ்குமாரை, வனிதாவும், கார்த்திக்ராஜாவும் அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்கள்.
படுகாயம் அடைந்து பலி
கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி நந்தீஸ்குமாரை அவர்கள் 2 பேரும் சேர்ந்து தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த குழந்தை நந்தீஸ்குமாரை தூக்கி கொண்டு ஊருக்கு சென்று வருகிறோம் என வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு கிருஷ்ணகிரி வந்திருக்கிறார்கள். வரும் வழியிலேயே நந்தீஸ்குமார் இறந்து விட்டான்.
எங்கே குழந்தை
இந்நிலையில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள மலையடிவாரத்திற்கு சிறுவன் நந்தீஸ்குமாரின் பிணத்தை எடுத்து சென்று வனிதாவும், சிவகார்த்திக்கும் புதைத்துவிட்டு, மீண்டும் திருப்பதிக்கு சென்றுள்ளார்கள். குழந்தை இல்லாமல் அவர்கள் வந்ததை பார்த்த வீட்டின் உரிமையாளர், எங்கே குழந்தை? என கேட்டுள்ளார். அதற்கு உடல் நிலை சரியில்லாததால் ஊரிலேயே குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டோம் என அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
திருப்பதி போலீசில் புகார்
இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் இது குறித்து திருப்பதி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தையை அடித்து கொன்றதாக அவர்கள் ஒப்புக்கொண்டார்கள் இதையடுத்து அவர்கள் 2 பேரையும் திருப்பதி போலீசார் கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து சிறுவன் நந்தீஸ்குமார் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பார்த்தனர். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்ராஜா மற்றும் வனிதா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பு
பின்னர் அவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர். இதில் வனிதாவின் கள்ளக்காதலன் கார்த்திக்ராஜா தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி கலைமதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை அடித்துக் கொலை செய்த வனிதாவுக்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.