எல்லாம் தேர்தல் வரைக்கும்தான்.. கையெடுத்து கும்பிடுவோம்.. ரிசல்ட் வந்தால் கண்ணே தெரியாது.. அமைச்சர்
கிருஷ்ணகிரி: தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு நாங்கள் யாரையெல்லாம் பார்க்கிறோமோ அவர்களை எல்லாம் கும்பிடுவோம், அதன் பிறகு எங்களுக்கு கண்ணே தெரியாது என அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மத்தியில் ஏற்கெனவே இப்படி ஒரு கருத்து நிலவி வரும் நிலையில் அமைச்சர் காந்தி பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் பயனாளிகளுக்கு1.29 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் உதவி வழங்கும் விழா நேற்றைய தினம் நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர் காந்தி பேசுகையில் நாங்கள் எல்லாம் அரசியல்வாதிகள். தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு பார்ப்பவர்களை எல்லாம் பார்த்து கையெடுத்து கும்பிடுவோம். அப்புறம் எங்களுக்கு கண்ணே தெரியாது.

வேலூர் காட்பாடி தொகுதி
வேலூர் காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றபோது அங்கு நின்றிருந்த 200 பேரை பார்த்து கும்பிட்டு வாக்கு சேகரித்தார். ஒரே இடத்தில் 200 பேரின் ஓட்டை வாங்கி விடலாம் என அமைச்சர் துரைமுருகன் நினைத்தார். அவர்களிடம் நீங்கள் எந்த பகுதி என துரைமுருகன் கேட்டார்.

200 பேரும் சித்தூர்
அதற்கு அந்த 200 பேரும் எங்கள் ஊர் சித்தூர் என்றும் ஒரு பணிநிமித்தமாக காட்பாடிகுக்கு வந்தோம் என்றும் தெரிவித்தனர். இவர்கள் கூறியதை கேட்டதும் அமைச்சர் துரைமுருகன் அப்படியே உடைந்து போய்விட்டார். பொதுவாக குழந்தைகள் அழும்போது சாக்லேட் கொடுப்பார்கள். அதே மாதிரிதான் மக்களுக்கு என்ன தேவையோ அதை அப்படியே செய்து விடுவோம்.

தூக்கத்தில்
தூக்கத்தில் மனைவி கை வைத்தாலும் அவர்களையும் கும்பிடுவோம். ஆனால் வெற்றி பெற்றுவிட்டால் எங்களுக்கு கண்ணே தெரியாது. உங்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என மக்களாகிய நீங்கள்தான் யோசித்து ஓட்டு போட வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகளுக்கு பயம் வரும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும் என்றார்.

அரசியல்வாதிகள்
பொதுவாக அரசியல்வாதிகள் என்றால் ஓட்டு போடும் வரைதான் தொகுதி பக்கம் வருவார்கள். தேர்தல் முடிந்துவிட்டால் அவ்வளவுதான் அந்த தொகுதியும் கண்ணுக்கு தெரியாது , அந்த தொகுதி மக்களையும் நினைத்து பார்க்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இது போன்ற டயலாக்குகள் சினிமாக்களிலும் வந்திருக்கின்றன. ஆனால் அமைச்சர் காந்தி இதை அப்படியே பிரதிபலிக்கிறார் என அங்கு நலத்திட்ட உதவிகளை பெற வந்த மக்கள் முணுமுணுத்தனர்.

பொன்முடி
இதே போல் அமைச்சர் பொன்முடி இலவச பஸ் பயணம் குறித்து பெருமையாக பேசுவதாக நினைத்து மக்களை இழிவாக பேசிவிட்டார். அதாவது நீங்கள் ஓசில பயணம் செய்றீங்களே என கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தன. அது போல் சில தாய்மார்கள் கண்டக்டரிடம் வம்படியாக பணத்தை பெற்றுக் கொண்டு டிக்கெட் கொடுக்குமாறும் தெரிவித்தனர். கண்டக்டர்களோ இலவச பயண டிக்கெட் மட்டும்தான் கொடுப்போம். காசை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்க கூடாது என தெரிவித்தனர். இது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பொதுமக்களும் நாங்கள் உங்களிடம் இலவச பயணம் கேட்டோமா எதற்காக நீங்களே கொடுத்துவிட்டு ஓசி பயணம் என்கிறீர்கள் என கடும் விமர்சனம் செய்தனர்.

முதல்வர் உருக்கம்
அது போல் அமைச்சர் ராஜகண்ணப்பன் பட்டியலினத்தை சேர்ந்த அரசு அதிகாரியை ஜாதியின் பெயரை கூறி திட்டியதாகவும் ஒரு பிரச்சினை கிளம்பியது. இதனால்தான் அவர் போக்குவரத்துத் துறையில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் திமுக பொதுக் குழு கூட்டத்தில் பேசிய போது விடிந்தால் என்ன பிரச்சினை வருமோ என தூக்கம் கூட வர மாட்டேங்கிறது என உருக்கமாக தெரிவித்தார். அதாவது அமைச்சர்களும் மூத்த நிர்வாகிகளும் பொதுவெளியில் தவறாக பேசுவதும் அவற்றை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதையும்தான் முதல்வர் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications