இன்று அதிகாலை பயங்கரம்.. ஓசூர் அருகே கர்நாடகா எல்லையில் லாரியை மறித்து 6 கோடி செல்போன்கள் கொள்ளை
கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே கர்நாடகா மாநில எல்லையில் லாரியில் கொண்டு சென்ற 6 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
ஒசூர் அருகே கர்நாடகா மாநில எல்லைப்பகுதியில் உள்ள தேவராயசமுத்ரா என்ற இடத்தில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 6 கோடி மதிப்புள்ள செல்போன்களை மர்மநபர்கள் வழிமறித்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கர்நாடகா மாநில போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் செல்போன் கம்பெனியிலிருந்து 6 கோடி மதிப்புள்ள செல்போன்கள் ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு பெங்களுர் கொண்டு செல்லப்பட்டது.

மர்மநபர்கள்
கண்டெய்னர் லாரி தமிழகத்தை கடந்து கர்நாடகா மாநிலம் கோலார் முளுபாகல் தேசிய நெடுஞ்சாலையில் தேவராயசமுத்ரா என்ற இடத்தில் இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி சென்றபோது அதனை வழிமறித்த மர்மகும்பல் ஓட்டுநர் மற்றும் அவரோடு இருந்தவர்களை தாக்கி கண்டெய்னர் லாரியிலிருந்த செல்போன்கள் அனைத்தையும் கொள்ளையடித்து மற்றொரு லாரியில் கடத்தி சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை
இந்த செல்போன்கள் கொள்ளை சம்பவம் குறித்து கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மற்றும் அதிலிருந்தவர்கள் கர்நாடகா மாநிலம் முளுபாகல் ரூரல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கர்நாடகா போலீஸார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து செல்போன்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி காஞ்சிபுரம் பகுதியிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு செல்போன்கள் ஏற்றி சென்றபோது கண்டெய்னர் லாரியை கடத்தி செல்போன்கள் அனைத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்றனர். அதே பாணியில் தற்போது காஞ்சிபுரத்திலிருந்து பெங்களுருவிற்கு கொண்டு செல்லப்பட்ட செல்போன்கள் அனைத்தையும் மர்மநபர்கள் லாரியை வழிமறித்து அதிலிருந்தவர்களை தாக்கி லாரியை கடத்தி சென்று அதன் உள்ளே இருந்த செல்போன்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மகாராஷ்டிரா கொள்ளையர்கள்
சம்பவம் நடந்த தேவராயசமுத்ரா என்ற இடத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள நேர்லகெரே சுங்கசாவடியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் சோதனை செய்தபோது அதில் மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட ஒரு கண்டெய்னர் லாரி செல்லும் காட்சிகள் இருந்துள்ளது. எனவே கொள்ளையர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம், கொள்ளையடிக்கபட்ட செல்போன்களை அந்த லாரியில் ஏற்றி சென்றிருக்கலாம் என போலீஸாருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications