துரோகம் பண்ணாங்க..அனுபவிக்கிறாங்க! போகிற போக்கில் போட்டு தாக்கிய டிடிவி தினகரன்! அவரையா சொல்கிறார்?
கிருஷ்ணகிரி : நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்க தொடங்கி விட்டார்கள் எனவும், செய்த தவறுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்பதால் யாரையாவது பிடித்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் நீக்கப்பட்டு ஓபிஎஸ் இபிஎஸ் ஒன்றிணைந்தனர். கட்சிக்கு ஓபிஎஸ் ஆட்சிக்கு இபிஎஸ் என நன்றாக சென்று கொண்டு இருந்த அதிமுக அரசியல் பயணம் தற்போது இருவருக்கும் இடையேயான அதிகார போட்டியால் இரு பிரிவாக இருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில் கட்சியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் அதிமுகவில் மீண்டும் மோதல் அரசியல் தலைதூக்கியிருக்கிறது.

டிடிவி தினகரன்
கட்சியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் மூவரது சந்திப்பும் இருக்கும் எனவும் அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

துரோகம் செய்தவர்கள்
இந்நிலையில் நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்க தொடங்கி விட்டார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர்," மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கைகளை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்கு உண்மையான இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான்.

ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை நிலைநாட்ட அமமுகவில் ஒன்றிணைய வேண்டும். வருங்காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் எம்.ஜி.ஆரின் கட்சியும், சின்னமும் நயவஞ்சகர்களின் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. அங்கு வேறு வழியில்லாமல் சிக்கியுள்ள தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நோக்கி வரக்கூடிய காலம் நெருங்கி விட்டது

நம்பிக்கை இல்லை
செய்த தண்டனைக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்பதால் யாரையாவது பிடித்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு அந்த இயக்கத்தை நடத்திக் கொண்டு உள்ளார்கள். நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்க தொடங்கி விட்டார்கள். " என விமர்சித்துள்ளார். டிடிவி தினகரன் இவ்வாறு விமர்சித்திருப்பது ஓ.பன்னீர்செல்வத்தையா அல்லது எடப்பாடி பழனிச்சாமியையா என்ற விவாதங்கள் தற்போது எழத் தொடங்கிவிட்டன.












Click it and Unblock the Notifications