ஆமணக்கு விதை கலப்பு.. 3 நாட்களானாலும் கெடாத 'இட்லி'.. இதுதான் ஸ்லோ பாய்சன்.. உசுரு முக்கியம் மக்களே!
கிருஷ்ணகிரி: ஒசூரில் உள்ள ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் இட்லிகள் கெட்டுப்போகாமல் இருக்க ஆமணக்கு விதைகள் கலக்கப்படுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆமணக்கு விதைகள் கலந்த உணவை சாப்பிடுவதால், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பாகங்களில் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அண்மை காலமாக பிரியாணி சாப்பிட்டதால் இளைஞர் உயிரிழப்பு, பிரைடு ரைஸ் சாப்பிட்டதால் இளைஞர் பலி, ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலி, இவ்வளவு ஏன் சிக்கன் சாப்பிட்ட இளைஞர் பலி என்று கூட செய்திகள் வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.
இதற்கு காரணம் மாறி வரும் உணவு பழக்கவழக்கங்களும், ஃபாஸ்ட் புட் மட்டுமே காரணம் என்று பரவலாக பேசப்பட்டது. இதற்கு மாறாக இட்லி, தோசையே சிறந்தது என்றும் மக்கள் வெளிப்படையாக பேசினர். 2 வயது குழந்தைக்கு கூட இட்லி கொடுத்தாலும் ஒன்றும் ஆகாது என்பதோடு, பாதுகாப்பான உணவாகவே இட்லி பார்க்கப்பட்டு வந்தது.

இட்லியால் பாதிப்பு
ஹோட்டல்களிலும் இட்லி வாங்கி சாப்பிடுவதால் எந்த கெடுதலும் உடலுக்கு வராது என்று நம்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒசூரில் இட்லி ரப்பர் போல் இருப்பதாகவும், மூன்று நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருப்பதாகவும் கூறி ஹோட்டல் ஒன்றில் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஹோட்டலில் வாக்குவாதம்
ஒசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஹோட்டலில், கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற ரப்பர் இட்லியை விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த இட்லிகளை சாப்பிடும் மக்களுக்கு ஏராளமான உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. சிறு குழந்தைகளும் இட்லியை சாப்பிட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த நபர்கள் சிலர், ஹோட்டல் உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆமணக்கு விதைகள் கலப்பு
அன்றாட கூலி தொழிலாளர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் இட்லியை சாப்பிட முடியும் என்பதால், அதன் விற்பனையை அதிகரிக்க ஹோட்டல் உரிமையாளர்கள் இதுபோல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், தங்களுக்கு வேறு இடத்திலிருந்து இட்லி குறைந்த விலைக்கு வருவதாகவும், அதனை நாங்கள் சட்னி, சாம்பார் சமைத்து விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், இந்த இட்லியில் ஆமணக்கு விதை மட்டுமே கலக்கப்படுவதாக தெரிவித்தனர்.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள்
இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் விற்கப்படும் இட்லி-யின் தரம் குறித்து சோதனை மேற்கொண்டு இட்லிக்கு பயன்படுத்தப்படும் மாவினை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். ஆமணக்கு விதைகளை இட்லி மாவுடன் சேர்த்து பயன்படுத்துவதால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்று மருத்துவர்களிடம் கேட்கப்பட்டது.

ஆமணக்கு விதையால் என்ன பிரச்சினை
ஆமணக்கு விதைகள் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ஆமணக்கு விதையில் ரிசின் என்னும் நஞ்சு இருக்கிறது. ஆமணக்கு விதையை உணவில் பயன்படுத்துவதால், அதனை சாப்பிடும் மக்களுக்கு புரத சத்து உற்பத்தி குறையும். அதேபோல் ஆமணக்கு விதை கலந்த இட்லியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நிச்சயம் ஒருநாள் நஞ்சாக மாறி பெரும் பாதிப்புகளை உடலில் ஏற்படுத்தும். குறிப்பாக கல்லீரல், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கிட்னி பாதிப்பு
அதேபோல் ஆமணக்கு கலந்த இட்லியை தொடர்ந்து சாப்பிடுவதால் கிட்னியை பாதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் உடலின் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் சேர்த்து கண்கள், வயிற்றில் இரத்தப்போக்கு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. சிலருக்கு அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

லாப நோக்கம்
ஃபாஸ்ட் புட் உணவகங்களில் ஷவர்மா, சிக்கன் பிரியாணி உள்ளிட்டவற்றில் கெட்டுப்போன சில பொருட்களை சேர்த்ததாலேயே பலரும் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது அதேபோல் இட்லியும் கலப்படம் செய்வது லாப நோக்கில் ஹோட்டல்கள் செயல்படுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications