உக்ரைனில் சிக்கிய மாணவர்கள்.. மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்கணும்.. பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள்
சென்னை: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மருத்துவ மாணவர்களைத் தாயகம் அழைத்து வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைன் 2ஆவது நாளாகப் போர் தொடரும் நிலையில், அங்குப் போர் நடவடிக்கைகள் உச்சமடைந்துள்ளது. இதனால் உக்ரைன் நாட்டில் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
போர் தொடங்கிய உடனேயே அந்நாட்டின் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அங்குச் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க மாற்று வழிகள் குறித்து உலக நாடுகள் ஆலோசித்து வருகிறது.
உக்ரைன் நாட்டில் மாணவர்கள் உட்பட 16 ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவர்களை மீட்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,
இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியில் வசித்து வரும் கலைச்செல்வன் என்பவரின் மகன் உக்ரைன் நாட்டில் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
தற்போது உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றம் ஏற்பட்டு உள்ள சூழ்நிலையில் அங்குத் தங்கிப் பயிலும் சாலைப்புதூரை சேர்ந்த மருத்துவ மாணவரைத் தாயகம் திரும்பத் தமிழக அரசு மற்றும் இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலைச்செல்வனின் பெற்றோர் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாணவர்களும் அங்கு மருத்துவம் படிக்கச் சென்றுள்ள நிலையில், அவர்களைப் பத்திரமாக மீட்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் உருக்கமாகக் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது